"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Monday, August 11, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 10











பாகம் 10
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை




1970 நவம்பர் 30 ஆம் தேதி சட்ட மன்ற மேலவையில் இந்து அறநிலையத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.ஆலங்களில் சாதி வேறுபாடின்றி யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

டிசம்பர் 2 ஆம் தேதி அரசாங்க மசோதா ஏகமனதாக நிறைவேறியது.1971 பிப்ரவரி முதல் தேதி அன்று,பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர்.பழனியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது.

அந்த மசோதா இந்து சமயத்திற்குப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும், தெய்வீகப் பேரவை அரசியல் சார்பான அமைப்பாகி விட்டது என்றும் பூணூல் அணிந்த காஞ்சிப் பெரியவர் கடுமையாக எதிர்த்தார்.

இந்து அறநிலைய திருத்த சட்டத்தை எதிர்த்து,ஏற்கனவே பணியாற்றிய 28 அர்ச்சகர்கள்,டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்த போதிலும் அர்ச்சகர் நியமனம் ஆகம விதி முறைப்படிதான் நடை பெற வேண்டும்.மத அனுஷ்டானத்தில் அரசு தலையிடக் கூடாது .அதனால் கோவிலில் உள்ள சிலைகள் தீட்டுப் பட ஏதுவாகும் என்று தீர்ப்பு வழங்கியது.

சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம் என்று சட்டம் பேசும் நீதிமன்றம் தான் இப்படி கோமாளித் தனமான தீர்ப்பை வழங்கி யது.

இறுதியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தோல்வியடைந்தது.

நம் தேசிய கவி பாரதியாரின் பாடல்களை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர்,நம் அடிகளார்.தன் காலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,கவிஞர் கண்ணதாசன் ஆகியோர்களின் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டார்.இந்த மூன்று கவிஞர்களுடன் நெருங்கிப் பழகினார்.

ஒரு முறை கோவையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியார்,பாரதிதாசன்,அடிகளார் மூவரும் கலந்து கொண்டனர்.

பாரதிதாசனும் அடிகளாரும் பேசிய பிறகு இறுதியில் மேடை ஏறிய நம் பெரியார் இந்து மதத்தை வெளுத்து வாங்கினார்.மேடையில் அடிகளாருக்கு அருகில் அமர்ந்திருந்த கவிஞர் பாரதிதாசன் ,"பெரியாரின் வழக்கமே இப்படித்தான்.இதற்காக நீங்கள் வருத்தப் பட வேண்டாம் ",என்று அடிகளாரிடம் கேட்டுக் கொண்டார்.அவரது உளமார்ந்த அன்பைக் கண்டு நம் அடிகளார் வியந்தார்.

அதன் பிறகு 1957 இல் குன்றக்குடி ஆதீன மடாலயத்திற்குப் பாரதிதாசன் வருகை தந்த போது,அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று சிறப்பித்தார்.


1961 இல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ஜீவானந்தம் தொடங்கினார்.1967 இல் அடிகளார் அந்த மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பித்தார்.

மறுவருடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெண்மணி என்னும் கிராமத்தில் கூலி உயர்வு பிரச்னையால்,நள்ளிரவில் நிலப் பண்ணையாளர்களின் தூண்டுதலின் பேரில்,விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடிசைகளை தீ வைத்து, உயிரோடு தீ வைக்கப்பட்டுக் கொல்லப் பட்டார்கள்.

அந்த நெருப்பில் கருகி, மிச்சம் இருந்தவர்களை சந்தித்து,உணவும்,உடையும் வழங்கி ஆறுதல் கூறினார்,நம் அடிகளார்.

திருப்பத்தூர் திருத்தளி நாதர் ஆலய விழாவில் அப்பர் அடிகள் கண்ட சமுதாயம் என்ற தலைப்பில் பேசிய ஜீவானந்தம் அவர்களின் பேச்சை,அடிகளார் மிகவும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

அன்று இரவே ஜீவாவை அடிகளார் மடாலயத்திற்கு அழைத்துச் சென்று சிறப்பளித்தார்.

அதன் பிறகும் திருச்சி அருள் நெறித் திருக்கூட்டத்தின் சார்பில் திருவாசக விழாவிலும் ஜீவா வெளுத்து வாங்கினார்.அடிகளார் அவரிடம் மேலும் சிறிது நேரம் பேசுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தேவகோட்டை திருவள்ளுவர் விழாவில் பட்டிமன்றம் நடந்தது. ஜீவாவும் அடிகளாரும் ,அதில் எதிர் எதிர் அணித் தலைவர்களாக நேருக்கு நேர் வாதிட்டார்கள். திருவள்ளுவர் மிகுத்து கூறியது அரசியலே என ஜீவானந்தமும்,திருவள்ளுவர் மிகுத்துக் கூறியது சமயமே என அடிகளாரும் வாதம் புரிந்தனர்.

அந்த பட்டிமன்றம் முடிந்த பிறகு,ஜீவனாந்தம் அடிகளாரிடம் நீங்களும் நானும் எதிர்க்கட்சிகளாக இருந்து விவாதிக்கக் கூடாது.அப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை இனி எனக்கு நீங்கள் உருவாக்கக் கூடாது என்றுக் கேட்டுக் கொண்டார்.

பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் பாடல்கள் என்ற நூலுக்கு அடிகளார் முன்னுரை எழுதியிருக்கிறார்.

நீண்ட தூரம் காரில் அடிகளார் பயணம் செய்யும் போது, போகிற வழியில் எங்கேனும் ஒரு கிராமத்தில் கல்யாண சுந்தரத்தின் பாடல் ஒலி பெருக்கியில் முழங்கினால், உடனே காரை நிறுத்தச் சொல்லி, பாடல் முழுவதையும் கேட்டு மகிழ்ந்து அதன் பிறகே கார் பயணத்தைத் தொடர்வார்.

"சோவியத் புரட்சியை பாரதியார் இனங்கண்டு வரவேற்றாரா? அல்லது எழுச்சி கண்டு வரவேற்றாரா?"

"செய்ந் நன்றி மறவாத பண்பில் சிறந்தவர் கர்ணனா? கும்ப கர்ணனா?"


"திருவள்ளுவர் போற்றுவது அறமா?பொருளா?இன்பமா?"

"வாழ்க்கைக்கு சிறந்த நெறி மார்க்சீயமா?காந்தீயமா?வள்ளுவமா?"

"பாரதியிடம் விஞ்சி நிற்பது சமுதாய உணர்வா?தேசீய உணர்வா?"

"பாரதிதாசன் மொழிப் பற்றாளரா?சமதர்மப் பற்றாளரா?"

இன்னும் பற்பல தலைப்புகளில் அடிகளார் தலைமையில் பட்டிமன்றங்கள் நடைபெற்றன.

பட்டி மன்றத்திற்குத் தலைமை தாங்கிய அடிகளார் தமது முன்னுரையில் விவாதப் பொருளையும் அதில் வாதிடுவோரையும் ஆழமாக அறிமுகப் படுத்துவார்.

ஒவ்வொரு பேச்சாளரும் பேசி முடித்த பிறகு, அவர் பேச்சின் முக்கிய கருத்துக்களை எதிராளிக்கு எடுத்துக் கொடுத்து மோதலை நேர்த்தியாக முடுக்கி விடுவார்.பேச்சாளர் எவரேனும் நெறி தவறிப் பேசினால்,அவரை மூக்கணாங் கயிறு பிடித்து இழுத்து நேர்வழிப் படுத்துவார்.

பட்டிமன்ற விறுவிறுப்பில் தொய்வு ஏற்படாமல் சாதுரியமாகப் பேசும் ஆற்றல்,இறுதியில் தனது தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆணித்தரமாகக் கருத்துக்களை எடுத்துரைக்கும் பாங்கு,இவற்றில் அடிகளாருக்கு நிகர்,அவரேதான்!

இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தின் தமிழகக் கிளைத் தலைவராக பணியாற்றிய அடிகளார்,பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் சிலருடன் ரஷ்யாவுக்கு சென்று,அங்கு 22 நாட்கள் சுற்றுப் பயணம் செய்தார்.

சென்னை அண்ணாசாலையில் மு.கருணாநிதியின் சிலையை பெரியார் தலைமையில் அடிகளார் திறந்து வைத்தார்.

"கலைஞர் முழு நாத்திகர்.அவர் சிலையை தெய்வீகப் பேரவைத் தலைவரான நீங்கள் திறந்து வைக்கலாமா?பேரவை உறுப்பினரான அனைவரும் சம்பந்தப் பட்டதாகி விடாதா?", என்று காஞ்சிப் பெரியவர் அடிகளாரைக் கண்டித்தார்.

"நான் தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகத் தான் சிலையைத் திறந்து வைத்தேன்.அதற்கும் தெய்வீகப் பேரவைக்கும் சம்பந்தம் இல்லை என்றார்",அடிகளார்.

குன்றக்குடியில் தமிழகம் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை அடிகளார் தொடங்கினார்.அதன் ஆசிரியரும் அவரே.சட்டப் சபையில் அடிகளாரின் முழுப் பேச்சும்,திருமுகம் என்ற பெயரில் சுவை மிக்க தலையங்கமும்,வெண்பாப் போட்டிகளும்,கேட்கிறோம் சொல்லுங்கள் என்ற புதிய பகுதியும் அதில் இடம் பெற்றன.




_ஆதிசிவம்,சென்னை.










Share/Save/Bookmark

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 9













பாகம் 9
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை




தன்னைப் பழிப்பவர்களைப் பார்த்து ,இறைவனின் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என அவர் உபதேசித்தார்.

பெரியார் சிலை உடைப்புப் போராட்டத்தை நம் அடிகளார் பகிரங்கமாக கண்டித்து, சிலை உடைப்பிற்கு எதிராக தெய்வீகப் பேரவையை உருவாக்கி,நாடெங்கும் அதன் கிளைகளைப் பரப்பி,தெய்வ பக்தியைப் பெருகச் செய்தார்.

அடிகளாருக்கு எதிராக பெரியார் தொண்டர்களும் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பைக் காட்டிக் கொண்டார்கள்.

அதன் பிறகு சென்னியப்ப முதலியார் இல்லத்தில் தங்கியிருந்த பெரியாரை, அடிகளார் நேரில் கண்டு பேசினார்.இருவரும் நெடுநேரம் விவாதித்தனர்.

"உங்களுக்கு மரியாதை செய்ய உங்கள் உருவப் படத்திற்கு எப்படி மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்களோ,அது போலத்தான் சாமி சிலைகளுக்கு நாங்கள் மாலையிடுவது என்பார்",நம் அடிகளார்.

"அதற்காக கோவில் மூலம் பிராமணர்கள் தின்பதை அனுமதிப்பதா?", என்பார் நம் பெரியார்.

சாதி ஒழிப்பும்,இந்தி எதிர்ப்பும் அந்த இருபெரும் சக்திகளையும் ஒன்றாக இணைத்தது.

அதன் பிறகு நாத்திகமும் ஆத்திகமும் ஒரே மேடையில் ஏறிப் பேசிய அதிசயம் நடந்தது!.

அதன் பிறகு ,"தமிழர்களின் தனிப் பெருந்தலைவர் பெரியார் அவர்களே...!",
என பெரியாரை அடிகளார் பாராட்டி அழைக்க...

"மகா சன்னிதானம் அவர்களே...!",
எனப் பெரியாரும் அடிகளாரை மேடையில் மதிப்புடன் அழைப்பார்.(பெரியாரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஒரே சன்னிதானம் நம் அடிகளார் தான்)


ஒரு முறை அடிகளாரின் அழைப்பின் பேரில், பெரியார் குன்றக்குடிக்கு வருகை தந்தார்.அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.அவர் நெற்றில் அடிகளார் விபூதி பூசியதையும் அவர் பவ்வியமாக ஏற்றுக்கொண்டார்.

அது பற்றித் தனது தொண்டர்களிடம் பெரியார் பேசிய போது," நான் எங்கே விபூதி பூசினேன்?...அடிகளார் தான் பூசி விட்டார்.அவ்வளவு தான் அதை அவர் எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதினார்.அந்த நேரத்தில் நான் முகத்தை திருப்பிக் கொண்டால்,அவரை அவமதிப்பதாகிவிடும்...எனவே நான் மறுக்க வில்லை", என்றார்.

அடிகளாரின் சாதி ஒழிப்பும், தமிழ் மொழிப் பற்றும் தி.மு.க தலைவர் அண்ணாவையும் பெரிதும் கவர்ந்தன.

ஒரு தமிழன் மடாதிபதியாகி இருக்கிறார் என்றால்,அதற்காக நாம் பெருமைப்பட வேண்டுமே தவிர,அவரை எதிர்க்கக் கூடாது என்று தி.க தொண்டர்களுக்குப் பெரியார் அறிவுரை வழங்கினார்.

குன்றக்குடியில் மகா சன்னிதானமாக விளங்கும் இளந்துறவி ,சாதி வேற்றுமைகளைச் சாடுவதில் எங்களுடன் ஒன்றுபடுகிறார் என்று அறிஞர் அண்ணாவும் கூட பெருமையுடன் பேசினார்.

1954 இல் காமராஜர் முதல் அமைச்சரான போது பச்சைத் தமிழன் என்று பாராட்டி அவர் ஆட்சிக்கு முழு ஆதரவு தெரிவித்தார்,பெரியார்.

1955 இல் பொழிந்த கடும் மழை காரணமாகப் பெரு வெள்ளம் பொங்கியது.

நிவாரணப் பணிகளை பார்வையிட்டபடி குன்றக்குடிக்குவந்த,காமராஜர் .

ஆதீன மடாலயத்தின்
முன்னால் ஏழை எளிய மக்கள் வரிசையாக நிற்பதையும்,அடிகளார் அவர்களுக்கு அரிசி வழங்குவதையும் கண்டார்.அரசு செய்ய வேண்டிய அரும்பணிகளை அடிகளார் செய்கிறார் என அகமகிழ்ந்தார்.

குன்றக்குடியில் 1965 இல் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கு
குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கினார்.

இந்திக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது சட்டத்தை ஏவி விட்டது ,அப்போதைய முதலமைச்சராக இருந்த பகத்வச்சலத்தின் அரசு.

விளைவு?

அடிகளாரும் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப் பட்டார்.முடிவில் அடிகளாருக்கு 350 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

1956 இல் காரைக்குடிக்கு அண்ணா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதாக அறிந்து, குன்றக்குடி நீங்கள் வருகை தர வேண்டும் என அதில் வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதினார்,அடிகளார் .

அண்ணா அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.அங்கு நடந்த இரவு விருந்துக்குப் பிறகு, மடாலயத் தோட்டத்தில், மங்கிய நிலவொளியில் அண்ணாவும் அடிகளாரும் நீண்ட நேரம் உரையாடினார்கள்.சாதி ஒழிப்பு,தமிழில் அர்ச்சனை,தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு போன்றவற்றில் இருவரின் கருத்துக்களும் ஒருமித்து இருந்தன.

1967 தேர்தலில் திமுக வென்றது.அறிஞர் அண்ணா முதல் அமைச்சரானார்.பூம்புகாரில் சிலம்பின் நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டது,அதற்குக் கால்கோள் விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.விழாவிற்கு நம் அடிகளாரும் அழைக்கப் பட்டார்.

கட்சிக்காரர்கள்,வேண்டியவர்கள், என்ற பாகுபாடின்றி,தமிழ் இலக்கிய விழாவிற்குத் தன்னை அழைத்த அண்ணாவை,அடிகளார் பாராட்டினார்.

அதோடு இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியதற்காக திருப்பத்தூர் கோர்ட்டில் கட்டிய அபராதத் தொகை ரூ 350 அய் திருப்பித் தரவும் உத்தரவிட்டார்,நம் அண்ணா.

1968 இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் "திருக்குறளை" தேசிய நூலாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.

பலரும் கூடி வாழ வேண்டுமாயின்,முரண்பாடுகளை மாறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் விரிவு படுத்தாமல் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அடிகளாரின் அமுத வாக்கு.

தமிழக மடாலயங்கள் அனைத்தும் சாதி அடிப்படையில் உருவானவைதான். பேரூர் மடாலயம்,வெள்ளாளக் கவுண்டரின் மடம்,குன்றக்குடி ஆதீன சைவ வேளாளர் மடம்,கோவிலூர் ஆதீன நகரத்தார் மடம்.

காஞ்சி சங்கராச்சாரியார் மடாலயம்,பிராமணர் மடம்,ஸ்ரீ பெரும்புதூர் ஜீயர் மடாலயம்,அய்யங்கார் மடம்.இதில் சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண மடாலயம் மட்டுமே சாதி வேறுபாடுகளைக் கடந்ததாகும்.

இந்த மடாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல்,ஒதுங்கி வாழ்ந்தனர்.அவர்களை எல்லாம் தனித்தனியே சந்தித்துப் பேசி அவர்களை தெய்வீகப் பேரவையின் உறுப்பினராக்கினார்.

அண்ணாவுக்குப் பிறகு தமிழக முதல்வரான கலைஞர் கருணாநிதி, அடிகளாருக்கு 1969 இல் மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி) பதவியை வழங்கினார்.அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இறைவனின் சாட்சியாக என்று உறுதி மொழி கூற வேண்டிய அடிகளார் மனச்சாட்சிப்படி என்று கூறினார்.

கடவுளின் பிரதிநிதியாகத் திகழும் அடிகளார், நாத்திகர்களைப் போல் மனச்சாட்சிப்படி என உறுதிமொழி எடுத்திருக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.


_ஆதிசிவம்,சென்னை.











Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics