"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, July 25, 2008

தினத்தந்தி முதலிடம் வந்த கதை -பாகம் 2











பாகம் 2

தினத்தந்தி முதலிடம் வந்த கதை



"சேட், உன்னிடம் அடகு வைக்க என்னிடம் எதுவுமில்லை. இருந்ததையெல்லாம் உன்னிடந்தான் அடகு வைத்திருக்கிறேன்.என்னை நம்பியிருக்கும் ஊழியர்களுக்கு இன்று நான் ஊதியம் கொடுத்தே ஆக வேண்டும்,இந்த வெள்ளை பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தருகிறேன்.சேட் நீ, இதில் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்.நான் கட்டுப் படுகிறேன்!" என்றார்,ஆதித்தனார்.

அன்றே சம்பளம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு அது மாதிரி சம்பவம் அவர் வாழ்க்கையில் வரவே இல்லை. எல்லாம் வெற்றிமுகம்,ஏறுமுகம் தான்!

ஒரு நாள் நள்ளிரவில் அமெரிக்க சனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட
செய்தி வந்தது.ஏற்கனவே அச்சான பிரதிகள் நிறுத்தப்பட்டு,கென்னடியின் மரணச் செய்தியுடன் பத்திரிக்கை அச்சிடப்பட்டு எல்லா ஊர்களுக்கும் அனுப்பப்பட்டது.

மறுநாள் அந்த செய்தி தினத்தந்தியில் மட்டுமே இடம் பெற்றிருந்து.எந்த ஆங்கில,தமிழ் தினசரியிலும் அச்செய்தி பிரசுரமாகவில்லை!

அதைப் போலவே நேருவுக்குப் பிறகு பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் மரணச் செய்தி,இரவு 3 மணிக்கு வந்தது.இச்செய்தி தினத்தந்தியில் மட்டுமே முதல் பக்கம் எட்டுப் பத்தி செய்தியாக வெளி வந்தது.பெரும்பாலன பத்திரிக்கைகள் தவற விட்டன.சில பத்திரிக்கைகள் மட்டும் கடைசி செய்தியாக சிறிய அளவில் பிரசுரித்தன.

கென்னடி சுட்டுக் கொன்ற செய்தியை படித்து விட்டு, "இந்த செய்தியை ஏன் இரவிலேயே எனக்கு சொல்ல வில்லை?", என்றார்.

"அய்யா, அந்த செய்தி இரவு 2 மணிக்குத் தான் எங்களுக்கே கிடைத்தது. உங்கள்
தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று தான் சொல்ல வில்லை", என்றார்,ஊழியர்.

"தூங்குகிறவன் பத்திரிக்கையாளன் அல்ல. இதை எழுதி கண்ணில் படும்படி,மேசை மீது ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்" , என்றார்,ஆதித்தனார்.குமுறும் எரிமலையாய்...



ஒரு முறை ஒரு கிராமத்து தந்தி ஏஜெண்டு ஆபிசுக்கு வந்திருந்தார்.அந்த விற்பனைப் பிரிவு குமாஸ்தா அவரை நிற்க வைத்தபடி பேசிக் கொண்டிருப்பதை ,தற்செயலாக தனது அறையில் இருந்து வந்த அய்யா,இதை பார்த்து விட்டார்.

உடனே அந்த ஏஜெண்டை தன் அறைக்கு அழைத்து, நாற்காலியில் உட்காரச் சொன்னார்
.பின்னர் விற்பனைப் பிரிவு குமாஸ்தாவைக் கூப்பிட்டு, "இவர் விற்றுக் கொடுக்கும் காசில் இருந்து தான் நமது பத்திரிக்கை நடக்கிறது.அதில் தான் உங்கள் சம்பளமும் அடங்குகிறது", என்றார்.

அந்த குமாஸ்தா ,தன் நடத்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

2 ஆவது உலகப் போர் நடந்த சமயம்.

"ரஷியா,ஜெர்மனி,இங்கிலாந்து என்று தினமும் செய்தி போடுறீங்க.அவை எங்கே இருக்கு? ", என்று ஆதித்தனார்,அய்யா கேட்டார்.

"இந்தியாவுக்கு மேற்கே", என்று தயக்கமாக பதில் வந்தது.

"சரி,அந்த நாடுகள் எங்கே இருக்குன்னு சாதாரண மக்களுக்கு புரியுமா,வாட்ச்மேன் கிட்டே முதலில் கேட்டு வாங்க", என்றார்,அய்யா.

"வாட்ச்மேன் தெரியவில்லை", என்று சொல்லி விட்டார்.

"பார்த்தீங்களா!யாருக்கும் புரியல.எந்த நாடு இந்தியாவுக்கு எந்தப் பக்கம் இருக்கு,எத்தனை மைல் தூரம்ன்னு எழுதி மேப் போடுங்க" ,என்றார்,அய்யா.

அடுத்த நாள் தந்தியின் விற்பனை இரண்டு மடங்கானது!

கென்னடி சுட்டுக் கொல்லப் பட்டார் என்று செய்தியை படித்த பிறகு அந்த ஆசிரியரை கூப்பிட்டு ,"சுட்டுக் கொல்லப் பட்டார் என்று தலைப்பை நீட்டி முழங்கக் கூடாது! சுட்டுக் கொலை! என்று தான் இருக்க வேண்டும்.இதற்குத் தான் அழுத்தம் அதிகம்!உச்சந்தலையில் ஓங்கி அடித்தது போலிருக்கும்!எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!", என்றார்,அய்யா.

கணேசன் என்பவர் தினத்தந்தி,கார்டூனில் சென்னை லைட் ஹவுசைக் காட்ட வேண்டியிருந்தது.

லைட் ஹவுஸ் படம் சரியாக இல்லை என்று தோன்றியது.ஆனால் அதை அப்படி மாற்று,இதை இப்படி மாற்று என்று சொல்ல வில்லை.

பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து "நேராகப் பாரீஸ் கார்னர் போய்,லைட் ஹவுசைப் பார்த்து விட்டு வாருங்கள்", என்றார்.

சித்திரக்காரர் தயங்கினார்.

"போய்ப் பார்த்துவிட்டு வாங்க,ஊம் போங்க என்று கண்டிப்புடன்", கூறினார்,ஆதித்தனார்.

கணேசன் லைட் ஹவுசைப் பார்த்து விட்டு வந்து தத்ரூமாக வரைந்தார்.பிறகே அதைப் பிரசுரம் செய்தார்,ஆதித்தனார்.



இந்தியாவிலேயே தமிழ் பத்திரிக்கைகள் தான் அதிகம் விற்பனையாகின்றன.இதற்குக் காரணம்,பேச்சு வழக்கில் உள்ள மொழியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.இதற்கு வழிகாட்டியது தினத்தந்தி என்றார்,ஒரு முறை, பண்டித நேரு.

தினத்தந்தி அலுவலகத்தில் காவல்காரராக இருந்தவர்,"ஆத்தி", தினத்தந்தி வாசகர் என்பதற்கு அன்று அளவு கோலாக இருந்தவர் இந்த ஆத்தி தான்.

ஒரு முறை திருப்பதி லட்டு விலை உயர்ந்த போது,"திருப்பதி இலட்டு விலை உயர்வு" என்று அ.மா.சாமி என்பவர் இலக்கணச் சுத்தமாகச் செய்தியை எழுதியிருந்தார்.இதழ் அச்சாகி வந்து,அதைப் பார்த்த ஆதித்தனார்,ஆத்தியை அழைத்தார்.இந்த செய்தியைப் படிப்பா என்றார்.

ஆத்தி எழுத்துக் கூட்டிச் செய்தியைப் படித்தார்."தி...ரு...ப்...ப...தி... திருப்பதி, இ...ல...ட்...டு...ஈலட்டு", என்று படித்த போது,ஆதித்தனார் குறுக்கிட்டார்."அது என்னப்பா ஈ லட்டு?", என்று கேட்டார். "ஈ மொய்த்த லட்டு போல் இருக்கிறது, அய்யா!", என்று ஆத்தி சொல்ல, ஆதித்தனார் உட்பட செய்தி அறையிலிருந்த அத்தனை பேரும் "கொல்" என்று சிரித்து விட்டார்கள்.

பிறகென்ன,ஈ மொய்க்காத செய்தி வெளியானது.

ஆதித்தனார் அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் முடிந்ததும் சிறுவர்,சிறுமியர்கள் ஆட்டோ கிராப்பில், கையெழுத்து வாங்க நிற்பார்கள்.அவர்களிடம் ,"தம்பி நீ யார்?", என்று அய்யா கேட்பார்."நான் தமிழன்!", என்று கூறினால்தான் அவனுக்கு கையெழுத்தே கிடைக்கும்.இப்படி சிறுவர்,சிறுமியர்களிடையே தமிழன் என்ற உணர்வை ஊட்டி வளர்த்தவர்,நம் அய்யா ஆதித்தனார்.

ஒரு முறை ஆதித்தனார் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.உதவியாளர் வெரி அர்ஜெண்ட் என்று போட்டிருந்த தபாலை இரண்டு முறை எடுத்து அய்யா பார்வையில் படும்படி எடுத்து நீட்டினார்.

அந்த எழுத்துக்களை உற்றுப் பார்த்துவிட்டு ,"இதை நீ எழுதினாயா?",என்றார்.

"இல்லையே", என்று திகைத்தார்,உதவியாளர்.

"நான் எழுதினேனா?", என்று கேட்டார்.

"இல்லையே", என்றார்,மறுபடியும்.

"வெரி அர்ஜெண்ட் என்று நீயும் எழுதவில்லை,நானும் எழுத வில்லை.இது அவனுக்கு வெரி அர்ஜெண்ட்.அவன் எழுதியிருக்கிறான்.நமக்கு எது அர்ஜெண்டோ அதைக் கவனி", என்றார்,அய்யா.



1981 இல் மே 24 நாளில் அய்யா ஆதித்தனார் அவர்கள் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

இது வரை தினத்தந்தி ஆபாசம் என்ற சொல்லுக்கு ஆளானது இல்லை.

ஆதித்தனார் வெறும் பத்திரிக்கையாளர் மட்டுந்தான் என்று யாரும் தயவு செய்து நினைத்து விட வேண்டாம்.

தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்.நம் உரிமையை,நாம் ஏன் மத்திய (டெல்லி)அரசிடம் பிச்சையாக கேட்க வேண்டும்? என்று மேடைகளில் முழங்கியது மட்டும் அல்லாமல், பெரியார்,காமராசர்,அண்ணா,ஜீவா மாதிரி தலைவர்களோடும் சிறைக்குச் சென்றவர்.

வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் தோன்றியதில்லை,தினத்தந்தி!இன்று வரை தமிழுக்கு எதிராக,தமிழ் இனத்துக்கு எதிராக,தமிழ் மக்களுக்குஎதிரானஎந்த செய்தியையும்
வெளியிட்டதில்லை.






தமிழ் உயர..

தமிழ்நாடு உயரும்...!

தமிழ்நாடு உயர்ந்தால்..?

நாம் உயர்வோம்....!


இந்த செய்தியைத் தான்,

நாம் வீட்டு வாசல்கள் தோறும் வந்து

தினம் தினம்

சொல்லாமல்.....
சொல்லிச் செல்கிறது...

....தினத்தந்தி.....!


_ஆதிசிவம்,சென்னை.













Share/Save/Bookmark

தினத்தந்தி முதலிடம் வந்த கதை-பாகம் 1







பாகம் 1

தினத்தந்தி முதலிடம் வந்த கதை

அக்காலத்தில் சென்னைக்கு வெளியே எந்த நாளிதழும் வெளி வர வில்லை.

மதுரையில் 1942 நவம்பர் 1 ஆம் தேதி அன்று முதல் தான் (தினத்)தந்தி நாளிதழ் வெளி வரத் தொடங்கியது.சென்னையில் அச்சடிக்கும் பத்திரிக்கைகள் மதுரைக்கு மறுநாள் தான் வரும்.அதற்குள் செய்திகள் பழசாகிவிடும்.

எனவே, மதுரையிலிருந்து 150 மைலுக்குள் இருப்பவர்களுக்கு அன்றே செய்திகளை வழங்கியது ,தந்தி. செய்திகளின் தலைப்பில் நட்சத்திரக் குறியிட்டு இந்த செய்தி மற்ற பத்திரிக்கைகளில் நாளைதான் வெளி வரும் என்ற குறிப்போடு அசத்தலாக வெளிவரும்.

உலகிலேயே விற்பனை அதிகமுள்ள "டெய்லி மிரர்" என்ற லண்டன் செய்தித் தாள் முறையை பின்பற்றி தான் வெளிவந்தது,தந்தி.

அந்த காலத்தில் நாளிதழ் அலுவலகத்திற்கு உள்,வெளிநாட்டுச் செய்திகள் ஆகியவை எல்லாம் தந்தி மூலமாக தான் வரும்.அதை அடிப்படையாக வைத்தே அந்த பெயர் சூட்டப்பட்டது.

1942 இல் தினத்தந்தியின் நிறுவனர் அய்யா ஆதித்தனார் நடத்திய "மதுரை முரசு" , என்ற செய்தித் தாள் வெறும் இரண்டு மாதம் மட்டுமே வெளி வந்து, நின்று போனது.

காரணம்?

"வெள்ளையனே வெளியேறு" , என்ற போராட்டம் நடந்தபோது மதுரையில் போலீஸ் படை துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரை சுட்டுக் கொன்றது."ஒருவர் மட்டுத்தான் கொல்லப் பட்டார்" , என்று செய்தி வெளியிடும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். "மூன்று பேர் கொல்லப் பட்டார்கள்!" என்ற செய்தியை வெளியிட்டுவிட்டு அத்துடன் அந்த இதழ் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது.

தந்தி தொடங்கிய பொழுது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் ,பத்திரிக்கைக்கான காகிதம் கிடைக்க வில்லை.தந்தி அலுவலகத்துக்கு நாள்தோறும் காலையில் வைக்கோல் வண்டி வரும்.மறுநாள் காலையில் அந்த வைக்கோல் தந்தி பத்திரிக்கையாக மாறி வெளியே போகும்.ஆரம்ப நாட்களில் தந்தி அலுவலகத்திலேயே காகிதமும் தயாரிக்கப்பட்டது.

சென்னையில் தந்தி தொடங்கப் பட்ட நேரத்தில் "பர்மாஷெல்" , என்ற பெட்ரோல் கம்பெனியின் சில்லறை விற்பனை நிலையங்கள் சென்னையில் இருந்தன.அதன் விளம்பரத்தை தந்தி படிப்பவர்கள் யாரும் கார் வைத்திருக்க மாட்டார்கள் என்று காரணம் சொல்லி தந்திக்கு விளம்பரம் தர,அந்த கம்பெனி மறுத்தது."ஒவ்வொரு டாக்சி டிரைவரும் டாக்சியின் சன்ஸேடில் தந்தியை செருகி நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
வைத்திருப்பதைக் காணமுடியும்" , என்று அந்த கம்பெனி நிர்வாகி ஒருவரே எடுத்துச் சொன்னார்.

இப்படித்தான் முதல் வெளிநாட்டு விளம்பரம் தந்திக்கு கிடைத்தது!


1943 செப்டம்பரில் சென்னையில் முதல் பதிப்பை தொடங்கிய நேரம், ஒரு நாள் சரியான அடைமழை!புயலும் சேர்ந்து கொண்டது.நாள் முழுவதும் மின்சாரமும் அடியோடு நின்று விட்டது.

பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்து செய்திகளை எழுதி,அச்சுக் கோர்த்தார்கள்.மின்சாரம் இல்லாமல் எந்திரத்தை எப்படி இயக்குவது?மனித சக்தியை நம்பினார்,ஆதித்தனார்.கையாலேயே எந்திரத்தைச் சுற்றி,பத்திரிக்கையை அச்சிட்டார்.

மறுநாள் காலையில் வெளிவந்த ஒரே நாளிதழ் "தந்தி" தான்!

1948 இல் ஆதித்தனாரின் அண்ணன் சி.தை.ஆதித்தன் மதுரையில் இறங்கி,ஒரு குதிரை வண்டியில் ஏறி,"தந்தி ஆபிசுக்குப் போ" , என்றார்.

வண்டியும் சரியாக தபால் தந்தி அலுவலகம் முன்னால் போய் நின்றது.

"இதில்லை.தந்தி என்று ஒரு செய்தித் தாள் வருகிறது அல்லவா? அந்த ஆபிசுக்குப் போ", என்றார்.

அங்கு போய் இந்த சம்பவத்தைச் சொன்னார்.அதன் பிறகு தான்
தந்தி நாளிதழின் பெயர் "தினத்தந்தி" , என்று ஆனது.

"உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" , என்ற முதல் முழக்கத்தை முழங்கியவர்.அந்த முழக்கத்துக்கு தன் பத்திரிக்கை வழியே உயிர் கொடுத்தவர்,நம் அய்யாஆதித்தனார் அவர்கள் தான்.

"பத்திரிக்கையில் தலையங்கம் இல்லா விட்டாலும்,செய்திகளை நான் கொடுக்கிறேன்.நீ படித்துக் கொள்,நீ சிந்தித்து ஒரு முடிவுக்கு வா என்கிற துணிச்சலை சொல்லித் தரும்,நடுநிலை நாளேடு தினத்தந்தி என்று ஒரு முறை சொன்னார்", அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.

ஆதித்தனார் படைப்பான நாள்தாள், "எழுத்தாளர் கையேடு",தமிழ்நாட்டின் எல்லா பத்திரிக்கையாளர்களுக்கும்,இன்றும் கூட சிறந்த வழிகாட்டியாக சிறந்து விளங்கி வருகிறது!

"சனியன்று காலை ஒரு தலைவர் இறந்து போகிறார்" , என்று வைத்துக் கொள்ளுங்கள்.மாலைத் தாள்கள் எல்லாம் செய்தியை வெளியிட்டு விடும்.நம்முடையதோ மறுநாள் காலையில் வெளியாவது."ஞாயிறு காலையில் தலைவர் இறந்தார்" , என்று போடலாமா?கூடாது.பின் எப்படி?இன்று தலைவர் உடல் அடக்கம் என்று தலைப்புத்தர வேண்டும்", என்றெல்லாம் பாடம் நடத்தியவர்,ஆதித்தனார்.

மற்ற பத்திரிக்கைகள் "தபால் கார்டு விலை உயர்கிறது" , என்று செய்தி வெளியிட்டால்,"தந்தியோ இன்று முதல் தபால் கார்டின் விலை உயர்கிறது" ,என்ற தலைப்போடு வெளிவரும்.

மற்ற பத்திரிக்கைகள் பட்டினிச்சாவு செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தபோது தந்தி மட்டும் பெரிதாக வெளியிட்டு பிரசுரம் செய்யும்.

பெரியார்,அண்ணா,கம்யூனிஸ்ட் தலைவர்களின் பிரச்சாரங்களை பற்றிய செய்திகளை வெளியிட்ட ஒரே நாளேடு நம் தினத்தந்தி தான்!

ரிக்.ஷாக்காரர்கள்,வாட்ச் மேன் போன்ற அடித்தட்டு மக்களும் படிக்கும்படியான எளிய தமிழில் வெளிவந்ததால், உயர் வகுப்பினர் யாரும் படிக்க மாட்டார்கள்.நாளடைவில்(கவுரவம் போய் விடும் என்பதால் ) ஆங்கில நாளேடான இந்து பத்திரிக்கைக்கு இடையில் மறைத்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் பட்டார்கள். அந்த வளர்ச்சிக்கு பெயர் தானே, "தினத் தந்தி " !

காலை நாளிதழ் என்பதால் பெரும் பாலும் இரவு நேரத்தில் தான் அச்சாகும். "மெஷின் நின்றால் வீட்டிலிருக்கும் தனக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்" , என்பார்.

பழுதான பாகத்தை ஒர்க் ஷாப்புக்கு தூக்கிப் போவது,மின்சார கோளாறு போன்ற பிரச்னைகளை சரி செய்த பிறகே, வீட்டுக்கு தூங்கப் போவார்.

1950 ஆம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று வெளித் தொழிற்சங்க தலையீட்டின் காரணமாக தினத்தந்தி அலுவலகத்து தொழிளாலர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்.

ஒரு நாள் கூட தினத்தந்தி நிற்கக் கூடாது என்பது தானே ஆதித்தனாரின் கொள்கை ?

30 பேர் மாலை அய்ந்து மணி அளவில் அலுவலகத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.

ஆதித்தனார் ஒரே ஒரு துணையாசிரியரோடு 4 பக்கங்களுக்கு தேவையான செய்திகளை தானே எழுதிக் குவித்தார்.வெளியில் சென்றவர்களில் 13 பேர் அன்றே மன்னிப்புக் கோரி மீண்டும் வேலைக்கு வந்து விட்டார்கள்.

பிறகென்ன,தினத்தந்தி வழக்கம் போல வெளிவந்தது!

1948 இல் ஒரு நாள்...

அன்று 7 ஆம் தேதி சம்பள நாள்.சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை.சேட்டிடம் கடன் வாங்கப் போனவன், " ஏகப்பட்ட கடன் இதற்கு மேல் கடன் தரமுடியாது" , என்று சேட் கண்டிப்பாகச் சொல்லி விட்டார் என்று, வெறுங்கையுடன் திரும்பி வந்தான்.

எந்தக் கஷ்டத்திலும்,"ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது தவறக் கூடாது.யாரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டாம்.இருக்கச் சொல்லுங்கள்.நான் வந்து விடுகிறேன்!" என்று காரை எடுத்துக் கொண்டு ஆதித்தனார்,அய்யா கிளம்பினார்,சேட்டைப் பார்க்க...

_ஆதிசிவம்,சென்னை.







Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics