"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, July 18, 2008

தவத்திரு குன்றக்குடி அடிகளார்-பாகம் 4







பாகம் 4
" தவத்திரு குன்றக்குடி அடிகளார்

-அவர்களின் கதை




இனி எந்த ஓட்டலுக்குள்ளும் நுழையக் கூடாது.சொந்தம் பந்தம் என்று யார் வீட்டுக்கும் போகக் கூடாது.சினிமா நாடகம் பார்க்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார்.

திருநெல்வேலி அருகிலுள்ள பாண தீர்த்தம் பக்கத்தில் காட்டுப் பாதையைக் கடக்கும் போது, ஒரு முரட்டு ஆசாமி வழிமறித்து "ஏண்டா, தடிப்பயலே! உழைத்துச் சாப்பிடாமல் இப்படி சாமியார் வேஷம் போட்டு ஊரையையும் உலகத்தையும் ஏய்த்துப் பிழைக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லை?" , என்று திட்டியதுடன் வாய்க்கு வராத மட்டரக வார்த்தைகளால் அர்ச்சனையும் செய்தார்.

நம் பரதேசி கோபப்டாமல் பொறுமையாகவும் ,நிதானமாகவும்,பக்குவமாகவும் தன்னைப் பற்றி எடுத்துரைத்தார்.அந்த முரடனும் மனம் மாறி சாலை வரை நம் பரதேசிக்கு வழித்துணையாக வந்து சென்றான்.

பிறகு திருச்செந்தூர்,கன்னியா குமாரிக்குப் போய் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்தார்.

நம் பரதேசிக்கு சுவாமி விவேகானந்தர் மீது தனி மரியாதை இருந்தது.

முன்பெல்லாம் யாத்திரை மூன்றான்டு காலம் நீடிக்கும். அவர்காலத்திலேயே நவீன போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டதால்,அவரின் யாத்திரை
47 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது.

யாத்திரை சென்ற பிறகு பரதேசி பட்டத்திற்கு அடுத்த கட்டம் தம்பிரான் பட்டமாகும்.அந்த பட்டம் பெற பல வருடங்கள் ஆகும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக ,யாத்திரைக்கு சென்ற நான்கே மாதங்களில்,நம் பரதேசிக்கு மந்திரக் கஷாயம் கொடுத்து அவரை தம்பிரானாக்கினார் ,மகா சன்னிதனம்.


கந்தசாமி பரதேசியை குறுகிய காலத்தில் தம்பிரானாக உயர்த்தியது ஏற்கனவே இருந்த மற்ற தம்பிரான்களின் மனதில் பொறாமைத் தீயை மூட்டியது.

ஒரு நாள் காலையில் கந்தசாமி தம்பிரான் காவேரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்.அப்போது பேச்சு தமிழாசிரியர் சுந்தரம் பிள்ளைப் பற்றித் திரும்பியது.

"படித்தால் பொருள் விளங்கிப் படிக்க வேண்டும்.இல்லையேல், படித்து என்ன பயன்?குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டாமா?" , என்று கந்தசாமித் தம்பிரான் சொன்னதை...

பொறாமைப் பேய் பிடித்த மற்ற தம்பிரான்கள் கண்,காது,மூக்கு வைத்து கதையை வேறு விதமாக மாற்றி மகா சன்னிதானத்திடம் பற்ற வைத்துவிட்டார்கள்.

விளைவு?

கந்தசாமி பார்த்து வந்த எல்லா வேலைகளும் மற்றத் தம்பிரான்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.அவர் தங்கியிருந்த அறை காலி செய்யப்பட்டு வாழைக்காய்களைக் கனிய வைக்கப் பயன்படும் அறைக்கு மாற்றப்பட்டார்.

மனம் கலங்க வில்லை.தமிழ் இலக்கியத்திற்குள் தன்னைக் கரைத்துக் கொண்டார். தமிழ்க் கற்றவனை தனிமை என்ன செய்து விடும்?

நெருப்பை நிமிர்ந்து தானே எரியும்?

அவருக்குப் பிடித்தமான பொருள்களை, நம் தம்பிரான் மேல் பற்று வைத்திருக்கும் மற்ற தம்பிரான்கள்,நள்ளிரவில் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்.

ஒரு நாள் இரவு மகா சன்னிதானம், நம் தம்பிரானை கூப்பிட்டு

"நீ நல்ல பிள்ளை என்றைக்கும் நன்றாகத் தான் இருப்பாய்!" , என்று திரு நீறு வழங்கி ஆசிர்வாதித்தார்.

மகா சன்னிதானத்தின் மனம் பழுத்ததால் .வாழைக்காய் பழுக்க வைக்கும் அறையிலிருந்த நம் தம்பிரான் பழைய அறைக்கு மாற்றப்பட்டார்.பழைய தடைகளும் தகர்ந்தன.

தருமபுர ஆதினத்தில் ஆவணி மூலத் திருநாளை முன்னிட்டு , ஒரு பட்டிமன்றம் நடத்தப் பட்டது.அதுதான் நம் அடிகளாரின் முதல் பட்டிமன்றப் பேச்சு. அந்த மேடைத் தமிழ்தான் தன்னை பட்டிதொட்டிகளில் எல்லாம் கொண்டு போய் நிறுத்தப் போகிறது என்பதை அவர் அப்போது நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.

"தருமிக்கு பொற்கிழி வழங்கிய வரலாற்றில் தவறு செய்தவர் யார்...நக்கீரரா... இல்லை சிவபிரானா...?" , என்பது தான் அந்த பட்டிமன்றத் தலைப்பு.

"தருமிக்கு சிவபெருமான் பினாமியாக கவிதை எழுதிக்கொடுத்தது.தமிழ்ச் சங்கத்தில் கருத்துடன் தான் மோதவேண்டுமே தவிர,நெற்றிக் கண்ணைக் காட்டி சிவ பெருமான் மிரட்டலாமா,இது வன்முறை வழியில் தன் கருத்தை ஏற்க செய்யும் செயலாகாதா, இது நல்ல மரபாகுமா?

எனவே இப்படித் தவறுகளை சிவபெருமான் செய்திருக்க மாட்டார்.இது திருவிளையாடல் புராணம் பாடிய புலவர் சிவனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் செய்த தவறு" , என்று நம் தம்பிரான் புதுக்கருத்துடன் அழகாக வாதிட்டார்.



...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....

_ஆதிசிவம்,சென்னை.



Share/Save/Bookmark

"ஆப்பிள் தோட்டம்"-கவிதை



ஆப்பிள் தோட்டம்-கவிதை


கடவுள் நம்பிக்கை பெரிதா
தன்னம்பிக்கை பெரிதா
யோசித்தான்
தன்னம்பிக்கை இல்லாதவன்

பணக்கார சாமி தானே
எதுக்கு
(உயரமான)
உண்டியல்?

கள்ள வோட்டுக்கு
இரண்டாண்டு சிறைத் தண்டனை
நல்ல வோட்டுக்கு?
அய்ந்தாண்டு தண்டனை!

ஆப்பிள் சாப்பிடாதீர்
விலை அதிகம்
சொன்னாள்
ஆதாம் மனைவி ஏவாள்


_ஆதிசிவம்,சென்னை.







Share/Save/Bookmark

தவத்திரு குன்றக்குடி அடிகளார்- பாகம் 3










பாகம் 3
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

-அவர்களின் கதை




ரங்கநாதன் திருச்சியில் உள்ள டி.வி.எஸ் பஸ் கம்பெனியில் செக்கிங் வேலைக்கு விண்ணப்பம் செய்தான்.

அந்தக் கால பஸ்களும்,லாரிகளும் அடுப்புக் கரியால் தான் ஓட்டப்பட்டன.அதனால் அங்கு கரி மூட்டையை தலையில் தூக்கிப் போய் கரி அடுப்பு தொட்டியில் நிரப்பும் வேலைதான் கிடைத்தது..

வேலை பிடிக்காததால் ,ராயபுரத்தில் தனியார் காகிதத் தோழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான்.நான்கு மாதங்களாக ஊதியம் எதுவும் தரவில்லை என்பதால் ,அந்த வேலையையும் விட்டு விட்டான்.

அப்புறம்,ஆரம்ப பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்தது.அதுவும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்க வில்லை.

வேலை பார்க்காத ரங்கநாதனை "தண்டச்சோற்று தடிராமன்,சோம்பேறி", என்பது போன்ற பல பட்டங்களைச் சூட்டி பெற்றோர்களும் அண்ணன்களும் பாராட்டினார்கள்.

பக்கத்து தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதாக கேள்விபட்டு, தந்தையின் வற்புறுத்தலை மீற முடியாமல்,அங்கு தனியே சென்று ,அங்கிருந்த 25 ஆவது குருமாக சன்னிதானமாக வீற்றிருந்த கயிலை குருமணி சுவாமி அவர்களை நேரில் தரிசித்து,நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து வணங்கிய பிறகு வேலைகேட்டு விண்ணப்பித்தான்.

முதல் பார்வையிலேயே ரெங்கநாதனை சன்னிதானத்திற்குப் பிடித்து போனால், உடனே வேலை கிடைத்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளில் கூட வீட்டுக்குப் போவதில்லை.அங்கேயே தங்கி விடுவான். அப்போதும் கூட நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதில்,பத்திரிக்கைகளைப் படிப்பதில் ஆர்வமாக இருப்பான்.


ரெங்கநாதனின் ஆர்வம்,அர்ப்பணிப்பு,பணிவு,நேர்மை போன்ற குணங்களால் மகா சன்னிதானத்திற்கு ரங்கநாதனின் மேல், ஒரு பிடிப்பு ஏற்பட்டு இருந்தால்...

ரங்கநாதனைப் பற்றி முகக் கண்ணால் கண்டு வந்து சொன்ன குற்றசாட்டுகளை, சுவாமிகள் தன் அகக் கண்ணால் பார்த்து மன்னிப்பார்.

ஒரு நாள் மகா சன்னிதானம்,ரங்கநாதனிடம் விளையாட்டாக "பழுக்கலாமா?", என்று கேட்டார்.அதன் பொருள் முதலில் புரியாமல் விழித்த ரங்கநாதன்,அதன் விளக்கம் தெளிந்து...

"நானும் மகா சன்னிதானத்தின் ஆதரவில் சாமியாராகப் போகிறேன்", என்று பெற்றோர்களிடம் அனுமதி கேட்டான்.

இந்த விபரீதப் பேச்சால் மிரண்ட பெற்றோர்கள்."இனி அந்த மடத்துக்கே போகக் கூடாது", என்று கடுமையாக கண்டித்தார்கள்.காரியம் கெடப் போகிறது என்று அஞ்சிய ரங்கநாதன் அவர்களின் பேச்சுக்கு கட்டுப் படுவதைப் போல நடித்தான்.

அதன் பிறகு, அவர்களுக்குத் தெரியாமல் 28.07.1945 இல் துறவியாவதற்கு முதல் படியான யாத்திரைக் கஷாயம் பெற்று, தன் பெயரையும் கந்தசாமி பரதேசி என மாற்றிக் கொண்டார்.

இதைக் கேள்விப்பட்ட அவரின் பெற்றோர்கள்,அண்ணன்களும் ஆதீன மடத்திற்கு முன்பு நள்ளிரவில் படையெடுத்து வந்து "குய்யோ முறையோ" எனக் குரல் எழுப்பினார்கள்.அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது.

எப்படியாவது கந்தசாமி பரதேசியை ரங்கநாதனாக்கி குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று விடவேண்டும் என்ற திட்டத்தோடு தான் கிளம்பி வந்திருக்கிறார்கள்.

"விடிந்ததும் கண்டிப்பாக வந்து விடுவேன்", என்று வேறு வழி தெரியாததால் இந்த பொய்யான வாக்குறுதி அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்,நம் கந்தசாமி பரதேசி.

"துறவியாக வேண்டாம்!" , என்று பரதேசியின் பெற்றோர்கள் அழுது புலம்பி விட்டு போனதை அறிந்த சன்னிதானம்

"நம் பரதேசியை அழைத்து உன் முடிவு என்ன ?" , என்று கேட்டார்.

"ஏற்கனவே எடுத்த முடிவுதான் என்றார்",புதிய பரதேசி.

பரதேசியானால் முதல் கடமையாக தீர்த்த யாத்திரைக்கு காசிக்கோ,கன்னியாகுமரிக்கோ அனுப்புவது வழக்கம்.

"மீண்டும் உன் பெற்றோர்கள் வருதற்குள்,நீ யாத்திரைக்குப் போய் வா.அதற்குள் அவர்களின் மனமும் ஓரவளவு மாறிவிடலாம் என்றார்", சன்னிதானம்.

காவியுடை,மொட்டை தலை,உருத்திராட்சக் கொட்டை மாலை சூடி,ஆதினத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தர தேசிகரும் பரதேசியோடு வழித்துணையாக அனுப்பப் பட்டார்.

இருவரும் மாயூரம் வரை நடந்து அங்கேயே ரயில் ஏறி, கும்பகோணம்,தஞ்சாவூர்,திருச்சி,திண்டுக்கல் வழியாக மதுரை வந்து சேர்ந்தனர்..

காலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் உள்ள சரவணப் பொய்கையில் தீர்த்தமாடி விட்டு குளக்கரையில் கண்களை மூடித் தியானத்தில் ஈடுப்பட்டார்.

கண்விழித்துப் பாரத்தபோது சுற்றிலும் சில்லரைக்காசுகளாக சிதறிக்கிடந்தன.நம்மை பிச்சைக்காரன் என்று நினைத்து விட்டார்களே என்று பதறி கண்கலங்கி போனார்.

அங்கிருந்த ஓட்டலில் கூட அதே அளவு மரியாதை தான் கிடைத்தது.

"யாராடா அவன் பரதேசிப் பயல், வெளியில் நின்று கொடுப்பதை வாங்கிக் கொண்டு போ!உள்ளே வராதே", என்று துரத்தியடிக்கப்பட்டார்.


...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....

_ஆதிசிவம்,சென்னை.












Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics