"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Showing posts with label குன்றக்குடி அடிகளார். Show all posts
Showing posts with label குன்றக்குடி அடிகளார். Show all posts

Monday, August 18, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார்"-பாகம் 12









பாகம் 12
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

ஆயினும் அடிகளார் போலீஸ் அனுமதியுடன் சமாதான யாத்திரை சென்றார்.கிறிஸ்தவப் பேராயருடன் குன்றக்குடி அடிகளார் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறார் என்பதை அறிந்த இந்து முன்னணி வழக்கம் போல இந்துக்களின் துரோகியே திரும்பிப்போ என அடிகளார் சென்ற இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டியது.

அடிகளார் அதைக் கண்டு சற்றும் பின் வாங்க வில்லை.சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பின்...

மெல்ல மெல்ல அமைதி திரும்பியது.

முன்பு அடிகளாரை குறை கூறிய அதே இந்து முன்னணி, அதன் பிறகு அவரைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது.

ஒரு சமயம் அடிகளார் தமது ஆதீன ஊழியர்களை அழைத்து," சிவகங்கை மகாராஜா நாளை குடும்பத்துடன் இங்கு வருகை தருகிறார்கள்.எனவே சுமார் நாற்பது பேருக்குத் தேவையான உணவுகளை மிகச் சிறப்பாகத் தயாரிக்க வேண்டும்", என்று வேண்டிக் கொண்டார்.

அதைக் கேட்ட ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.உற்சாகத்துடனும்,சுறுசுறுப்பாகவும் சிறந்த உணவு வகைகளை அவர்கள் தயாரித்தனர்.மன்னரின் வருகையை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க,அடிகளார் நாற்பது விவசாயக் கூலிகளை அங்கு அழைத்து வந்தார்.

"மகாராஜவிற்குத் தயாரித்த உணவுகளை இவர்களுக்குப் பரிமாறுங்கள்", என உத்தரவிட்டார்.

ஊழியர்கள் அதிர்ச்சியில் திகைத்தனர், "சிவகங்கை மன்னர் வருவதாகச் சொன்னீர்களே,சாமி?", எனக் கேட்டனர்.

"ஆமா...சொன்னேன்...இந்த உழைப்பாளிகளும் நமக்கு மன்னர்கள் தான்.எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதியார் பாடவில்லையா?"

"முதலிலேயே தாங்கள் இப்படிச் சொல்லியிருக்கலாமே, சாமி?"

"சொல்லியிருந்தால் சிறப்பாக உணவு சமைத்திருக்க மாட்டீர்கள்.மன்னருக்கு நாம் விருந்து படைப்பது பெரிய விஷயமல்ல.இந்த ஏழை எளிய தொழிலாளிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு போதும் பார்த்திராத உணவுகளை இப்போதும் நாம் படைக்கிறோமே,இதுதான் சிறப்பு" என்றார்,அடிகளார்.

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வைர விழாவுக்கு அப்போதைய தமிழக ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.அந்த விழா மேடையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு "கவுரவடாக்டர் "பட்டத்தை கவர்னர் வழங்கினார்.

"64 வயது நிறைந்த அடிகளார் சிறந்த புலமையாளர்.தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்.பட்டி மன்றங்களிலும்,வழக்காடு மன்றங்களிலும் தெளிவான சிந்தனையுடன்...பேசும் வல்லவர்.30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.இவர் எழுதிய ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலுக்கு தமிழக அரசு முதற்பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

குன்றக்குடியைச் சூழ்ந்துள்ள சில கிராமங்களை அடிகளார் தத்து எடுத்து,நலிந்த பிரிவினர் உயர்வதற்கு வழி வகுத்தவர்.சுதேசி விஞ்ஞான இயக்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் தமிழில் அறிவியலைப் பரப்பி வருகிறார்.16 கல்வி நிலையங்களை நிறுவி,சிறப்பாக அவற்றைச் செயல்படுத்துகிறார்.

தீண்டாமையை ஒழிக்கவும்,இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் அல்லும் பகலும் அயராமல் அடிகளார் உழைத்து வருகிறார்."

இவ்வாறு விழா மேடையில் அறிவிக்கப் பட்டது.

13-04-95 வியாழக்கிழமை மாலையில்,குன்றக்குடி மடாலயத்தில் அடிகளாருக்குத் திடீரென மார்பு வலியும்,மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.உடனே அவரைக் காரில் ஏற்றி மதுரைக்கு கொண்டு வந்தனர்.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அடிகளார் சிகிச்சைக்குச் சேர்க்கப் பட்டார்.

குன்றக்குடியிலிருந்து அவரது கார் புறப்படும் முன் மதுரையில் உள்ள மூன்று முக்கிய பிரமுகர்களுக்கு டெலிபோன் மூலம் தகவல் பறந்தது.அந்த மூவரில் ஒருவர் தான் கருணைதாசன்.மாநகராட்சி முன்னாள் உறுப்பினரான அவர்,திருவருள் பேரவையின் மாநில இணைச் செயலாளரும், தமிழ்பாவை மாத இதழின் ஆசிரியரும் ஆவார்.

இரவில் நேரம் கழித்து வந்த கருணைதாசனிடம் குன்றக்குடியிலிருந்து போன் வந்த செய்தி தெரிவிக்கப் பட்டது.உடனே அவர் குன்றக்குடி மடாலயத்திற்கு போன் செய்தார். அந்த நேரத்தில் அந்தப் போனை எடுத்துப் பேச அங்கே யாரும் இல்லை.

மறுநாள் அடிகளார் மீனாட்சி மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விப் பட்டு அங்கு விரைந்தார்,கருணைதாசன்.

"நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?", என்று கேட்டார்,அடிகளார்.

"சாமி, மதுரைக்கு வந்திருப்பது எனக்கு எப்படித் தெரியாமல் போகும்?", என்று கருணைதாசனும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.சுமார் அரை மணி நேரம் இருவரும் உரையாடினார்கள்.அப்போது அடிகளார் தெளிவாகவும்,தெம்பாகவும் இருந்தார்.

அடுத்த நாள்...

மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமியோடு, கருணைதாசனும் பார்க்கப் போய் இருந்தார்.

அடிகளாருக்கு தூக்க ஊசி போடப் பட்டிருந்தது.இவர்களைப் பார்த்த அடிகளார் சோகச் சிரிப்புடன் பேசினார்.

அடிகளாரை பரிசோதித்த மருத்துவரிடம் போய் அடிகளாரின் உடல் நலம் பற்றி விசாரித்தபோது...

அதிர்ச்சியான செய்தி தான் கிடைத்தது!

"அடிகளாரின் இதயத்தில் ஒரு வால்வு பொருத்த வேண்டும்.அமெரிக்காவில் தான் இந்த சிகிச்சையைச் சிறப்பாகச் செய்கிறார்கள்", என்றார்,மருத்துவர்.

கவலை முகமாக இருந்த கருணைதாசனின் முகம்,கலவர முகமானது. "டாக்டர் அதிகம் பேச வேண்டாம் என்கிறார்...நாம் திரும்பிப் போவோம்", என்று வாசலில் நின்ற காரில் இருவரும் ஏறியபோது,அடிகளாரின் உதவியாளர் அவசரமாக ஓடி வந்தார்,"சாமி, உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்கள்", என்று கருணைதாசனிடம் தெரிவிக்க மீண்டும் அடிகளாரிடம் விரைந்தார்,கருணைதாசன்.

கட்டிலில் ஒருபுறம் சாய்ந்து படுத்திருந்த அடிகளார்,கருணைதாசனின் கையைப் பற்றி உட்காரச் சொன்னார்."அமெரிக்கா சென்று இதய ஆப்ரேசன்(வால்வு மாற்ற சிகிச்சை)செய்து கொள்ள தீர்மானித்து விட்டேன்.

சென்னை மைலாப்பூரில் உள்ள கற்பக விடுதி(குன்றக்குடி ஆதினத்திற்கு உரியது)யில் என்னை வந்து பாருங்கள். நாம் அமெரிக்காவிற்குப் போவோம்", என்றார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி அவர் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்படுவதற்குத் தேவையான பாஸ்போர்ட்,விசா,விமான டிக்கெட் அனைத்திற்கும் அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலையில் மதுரையிலிருந்து , சென்னைக்குப் புறப்பட்டுச் செல்ல அவரின் உடல்நிலை ஒத்துழைக்க வில்லை.

15 ஆம் தேதி நள்ளிரவுக்கு சற்று முன்னதாக (11-45 மணியளவில்) அடிகளாரின் திணறித் துடித்த இதய துடிப்பு சப்தம் இல்லாமல் நின்று போனது!

தமிழ்நாட்டின் இதயமாக குன்றக்குடியில்துடித்துக் கொண்டிருந்த அந்த இதயம் நின்று போனது...!

மதுரையிலிருந்து வந்த அடிகளாரின் உடல், அந்த நள்ளிரவில் 2-30 மணிக்கு குன்றக்குடியை அடைந்ததும்...

அழுகையும்,ஒப்பாரியும் கூக்குரலும், கதறலும்,ஓலமும் அந்த இரவையும்,திசைகளைக் கிழித்ததுக் கொண்டு, அந்த வானத்தை நோக்கி உயர்ந்தது!

தமிழ் நாட்டின் உயர்வுக்கு மலையாய் எழுந்த அடிகளாரின் முன்னால் ஒட்டு மொத்த தமிழ்நாடே தலை குனிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது...!

சில உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் நம் மனம்...

யாராலும் சமாதானம் சொல்ல முடியாத,ஆறுதல் சொல்ல முடியாத சில இழப்புகளை,உண்மைகளை, நம் மனம் ஏற்க மறுக்கிறது...


.....முற்றும்.....

_ஆதிசிவம்,சென்னை.







Share/Save/Bookmark

" தவத்திரு குன்றக்குடி அடிகளார்"-பாகம் 11






பாகம் 11
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



கோவிலைத் தழுவிய குடிகளும்,குடிகளைத் தழுவிய கோவிலும் என்ற கொள்கையைத் தான் அடிகளார் நடைமுறைப் படுத்தினார்.

"கோவிலில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் தரகர்கள்(அர்ச்சகர்கள்,பூசாரிகள்) எதற்கு?பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று,வழிபடும் உரிமையை வழங்கினால், இரட்டை வெற்றி கிடைக்கும் ", என்றார், அறிஞர் அண்ணா.

சிலர் கோவில் நகைகளுக்குப் பாதுகாவல் இல்லாமல் போய் விடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

"ஒரு தாய் தன் மகனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வது வருந்தத்தக்கது, வேதனையானது.

எல்லோரும் கருவறைக்குள் சென்று வழிபடும் போது, தெய்வத்திற்கு நகைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.எனவே யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் பெறுமாறு அரசியல் சட்டத்தைத் திருத்துவதை,நான் வரவேற்கிறேன்", என்று அடிகளார் பேசினார்.

31.05.74 இல் குன்றக்குடி ஆதீனத்தின் அய்ந்து கோயில்கள் சார்பில் திருப்பத்தூரில் பட்டிமன்றம் நடை பெற்றது.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். ஆம் ,இல்லை என்ற தலைப்புகளில் சொற்போர் நடந்தது.அடிகளார் அதன் நடுவராக இருந்தார்.

அடிகளாரின் அய்ம்பதாவது பிறந்த நாளின் போது, "பெரியார் இறந்த பிறகு வந்துள்ள எனது பிறந்த நாள் இது.சமயத்துறையில் நான் பெரியாரின் கொள்கையிலிருந்து மாறுபட்டாலும்,சாதி ஒழிப்பு,தீண்டாமை ஒழிப்பு ஆகிய கொள்கைகளில் எங்கள் இருவருக்கும் ஒற்றுமையுண்டு.

பெரியார் விட்டுச் சென்ற அந்தப் பணிகளை நான் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்துவேன்", என்று அடிகளார் பேசினார்.

ஒரு சமயம் அடிகளார் பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்றபோது,அங்கு பணியாற்றிய பெண்கள், அவருக்கு மரியாதை தரும் நோக்கத்தில் தங்கள் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றினார்கள்.

உடனே அடிகளார் ,"செருப்பை அணிந்து கொள்ளுங்கள்.இல்லையேல் கால் புண்ணாகி விடும் என எச்சரித்தார்.தனக்கு மரியாதை தருவது பெரிதல்ல.கால்களை பாதுகாப்பது தான் முக்கியம்", என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


சுமார் 3000 மக்கள் வாழும் குன்றக்குடி கிராமம் வானம் பார்த்த பூமியாக,வறண்டு கிடந்தது.அங்கிருத்த நிலங்களில் கால் பகுதி கூட சரி வர விவசாயம் செய்யப்பட்டவில்லை.முக்கால் பங்கு நிலம் வீணே கிடந்தது.

அவ்வூர் மக்களில் பெரும் பான்மையோர் விவசாயக் கூலிகள்,வறுமைக் கோட்டின் கீழே மூச்சுத் திணறிக் கொண்டிருந்த அவர்களை முன்னேறச் செய்வது எப்படி? என அடிகளார் சிந்தித்தார்.

அவர் 1976 அக்டோபர் 2 ஆம் தேதி(காந்தி ஜெயந்தி அன்று) அவ்வூர்ப் பெரியவர்களை அழைத்துப் பேசினார்.நாம் எல்லோரும் சேர்ந்து, நம் கிராம முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யலாம்.இந்த மண்ணில் கிடைக்கும் மூலப்பொருட்களையும்,விளைபொருட்களையும் பயன்படுத்தி,கூட்டுறவு முறையில் தொழில்கள் தொடங்கலாம் என அடிகளார் தெரிவித்தார்.

முதலில் குன்றக்குடி கிராம மக்களைப் பற்றிய தகவல்கள் புள்ளி விவரக் கணக்குகள் தயாரிக்கப் பட்டன.ஒவ்வொரு குடும்பத்தினரின் எண்ணிக்கை,வயது வந்த ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,அவர்களின் கல்வித் தகுதி, தொழில்,தகுதி, ஆர்வம்,வீடு,ஆடுமாடுகள்,நிலம் போன்ற சொத்து வசதி,இதர வசதிகள்,கடன்நிலை போன்ற விவரங்கள் தொகுக்கப் பட்டன.

1977 காந்தி ஜெயந்தியன்று அதற்கான குன்றக்குடி திட்டக் குழு உருவானது.

பாலிதீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, பனை ஓலை மற்றும் நார்களால் முறம், கூடை, விசிறி,பெட்டி,துடைப்பம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை செய்யும் குடிசைத் தொழில்,முந்திரிக் கொட்டையிலிருந்து பருப்பைப் பிரித்து எடுக்கும் தொழிற்சாலை,அந்த பருப்பு நீக்கப் பட்ட தோட்டிலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை,பட்டுப் பூச்சி வளர்த்து,பட்டு நூல் எடுக்கும் திட்டம்
என பல திட்டங்களாக விரிவடைந்தது.

1980 ஆம் வருடத்தில் குன்றக்குடியில் இருந்த ஒரே ஒரு கந்து வட்டிக்கடைக்காரரையும் அங்கிருந்து வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.வட்டிக் கடைக்காரர் வெளியேற மறுத்தார்.எனவே அவரிடம் இனிமேல் யாரும் கடன் வாங்கக் கூடாது என்ற திட்டம் இயற்றப் பட்டது.

எனவே கந்து வட்டிக்கடைக்காரர் தானாகவே அங்கிருந்து வெளியேறினார்.

1989 இல் தமிழக முதலைச்சராக கலைஞர் கருணாநிதி மீண்டும் பதவியேற்ற, பிறகு குன்றக்குடியிலும் மதுபானக்கடை திறக்கப் பட்டது.

அடிகளார் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அந்த ஒற்றை மதுக் கடையையும் ஒழித்தார்.


1984 செப்டம்பர் 9 ஆம் தேதியிட்ட இந்து பத்திரிக்கையில் சமூக அடித்தள நிலையில் சில சாதனைகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.குன்றக்குடி கிராமத் திட்டக் குழுவின் சாதனைகள் அதில் விவரிக்கப் பட்டிருந்தன.

அப்போதைய இந்திய பிரதமர் இந்திரகாந்தி அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.அனைத்துக் கிராமங்களுக்கும் நான் விரும்பும் திட்டம் இதுவே என அடிகளாருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதினார்.

டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகத்திற்கும் பிரதமர் கடிதம் எழுதினார்.இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை அத்துடன் இணைக்கப் பட்டிருந்தது.குன்றக்குடியை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற கிராமங்களிலும் இது போன்ற திட்டங்களைச் செயல் படுத்துமாறு பிரதமர் அதில் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து 1985 பிப்ரவரியில் திட்ட ஆலோசகர் கே.வி.சுந்தரம், ஒரு குழுவினருடன் குன்றக்குடிக்கு வருகை தந்தார். அந்த குழு அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து,குன்றக்குடி திட்டக் குழுவின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட, பிறகு சென்றது.

06-08-1982 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழ் அர்ச்சனை மாநாடு காரைக்குடி பழ. கருப்பையா அவர்களின் முயற்சியால் நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கு நம் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்.

அந்த மாநாட்டில் தான் மீனாட்சியம்மன் கோவிலில் வடமொழியில் அர்ச்சனை நடத்தப் படும்.தமிழ் அர்ச்சனை வேண்டுமென விரும்புவோர் கோரிப் பெறலாம் என்ற விதி இருந்து வந்தது.

அந்த விதி மாற்றி அமைக்கப்பட்து.

இனி தமிழ் மொழியில் அர்ச்சனை நடை பெறும்.வட மொழி அர்ச்சனை வேண்டுமென விரும்புவோர் கோரிப் பெறலாம் என்ற புதிய விதி உருவானது.

1991 மே மாதத்தில் அடிகளார் அமெரிக்கா,இங்கிலாந்து,ஜப்பான் முதலிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை முறைகளை கண்டு வந்தார்.

1982 பிப்ரவரி,மார்ச் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் இந்து கிறிஸ்தவ மதக் கலவரம் தீயாய் எரிந்தது.

போலீஸ்,அரசாங்கம்,அரசியல் கட்சிகளாலும் கூட கலவரத்தை அடக்க முடியவில்லை.குன்றக் குடி அடிகளார் அமைதிப் பணிக்கு அங்கு விரைந்தார்.

கலவரப் பூமியில் ஒர் அமைதிப் புறாவாக, ஒர் அமைதிப் புயலாக!...


_ஆதிசிவம்,சென்னை.






Share/Save/Bookmark

Monday, August 11, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 10











பாகம் 10
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை




1970 நவம்பர் 30 ஆம் தேதி சட்ட மன்ற மேலவையில் இந்து அறநிலையத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.ஆலங்களில் சாதி வேறுபாடின்றி யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

டிசம்பர் 2 ஆம் தேதி அரசாங்க மசோதா ஏகமனதாக நிறைவேறியது.1971 பிப்ரவரி முதல் தேதி அன்று,பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர்.பழனியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது.

அந்த மசோதா இந்து சமயத்திற்குப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும், தெய்வீகப் பேரவை அரசியல் சார்பான அமைப்பாகி விட்டது என்றும் பூணூல் அணிந்த காஞ்சிப் பெரியவர் கடுமையாக எதிர்த்தார்.

இந்து அறநிலைய திருத்த சட்டத்தை எதிர்த்து,ஏற்கனவே பணியாற்றிய 28 அர்ச்சகர்கள்,டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்த போதிலும் அர்ச்சகர் நியமனம் ஆகம விதி முறைப்படிதான் நடை பெற வேண்டும்.மத அனுஷ்டானத்தில் அரசு தலையிடக் கூடாது .அதனால் கோவிலில் உள்ள சிலைகள் தீட்டுப் பட ஏதுவாகும் என்று தீர்ப்பு வழங்கியது.

சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம் என்று சட்டம் பேசும் நீதிமன்றம் தான் இப்படி கோமாளித் தனமான தீர்ப்பை வழங்கி யது.

இறுதியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தோல்வியடைந்தது.

நம் தேசிய கவி பாரதியாரின் பாடல்களை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர்,நம் அடிகளார்.தன் காலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,கவிஞர் கண்ணதாசன் ஆகியோர்களின் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டார்.இந்த மூன்று கவிஞர்களுடன் நெருங்கிப் பழகினார்.

ஒரு முறை கோவையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியார்,பாரதிதாசன்,அடிகளார் மூவரும் கலந்து கொண்டனர்.

பாரதிதாசனும் அடிகளாரும் பேசிய பிறகு இறுதியில் மேடை ஏறிய நம் பெரியார் இந்து மதத்தை வெளுத்து வாங்கினார்.மேடையில் அடிகளாருக்கு அருகில் அமர்ந்திருந்த கவிஞர் பாரதிதாசன் ,"பெரியாரின் வழக்கமே இப்படித்தான்.இதற்காக நீங்கள் வருத்தப் பட வேண்டாம் ",என்று அடிகளாரிடம் கேட்டுக் கொண்டார்.அவரது உளமார்ந்த அன்பைக் கண்டு நம் அடிகளார் வியந்தார்.

அதன் பிறகு 1957 இல் குன்றக்குடி ஆதீன மடாலயத்திற்குப் பாரதிதாசன் வருகை தந்த போது,அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று சிறப்பித்தார்.


1961 இல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ஜீவானந்தம் தொடங்கினார்.1967 இல் அடிகளார் அந்த மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பித்தார்.

மறுவருடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெண்மணி என்னும் கிராமத்தில் கூலி உயர்வு பிரச்னையால்,நள்ளிரவில் நிலப் பண்ணையாளர்களின் தூண்டுதலின் பேரில்,விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடிசைகளை தீ வைத்து, உயிரோடு தீ வைக்கப்பட்டுக் கொல்லப் பட்டார்கள்.

அந்த நெருப்பில் கருகி, மிச்சம் இருந்தவர்களை சந்தித்து,உணவும்,உடையும் வழங்கி ஆறுதல் கூறினார்,நம் அடிகளார்.

திருப்பத்தூர் திருத்தளி நாதர் ஆலய விழாவில் அப்பர் அடிகள் கண்ட சமுதாயம் என்ற தலைப்பில் பேசிய ஜீவானந்தம் அவர்களின் பேச்சை,அடிகளார் மிகவும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

அன்று இரவே ஜீவாவை அடிகளார் மடாலயத்திற்கு அழைத்துச் சென்று சிறப்பளித்தார்.

அதன் பிறகும் திருச்சி அருள் நெறித் திருக்கூட்டத்தின் சார்பில் திருவாசக விழாவிலும் ஜீவா வெளுத்து வாங்கினார்.அடிகளார் அவரிடம் மேலும் சிறிது நேரம் பேசுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தேவகோட்டை திருவள்ளுவர் விழாவில் பட்டிமன்றம் நடந்தது. ஜீவாவும் அடிகளாரும் ,அதில் எதிர் எதிர் அணித் தலைவர்களாக நேருக்கு நேர் வாதிட்டார்கள். திருவள்ளுவர் மிகுத்து கூறியது அரசியலே என ஜீவானந்தமும்,திருவள்ளுவர் மிகுத்துக் கூறியது சமயமே என அடிகளாரும் வாதம் புரிந்தனர்.

அந்த பட்டிமன்றம் முடிந்த பிறகு,ஜீவனாந்தம் அடிகளாரிடம் நீங்களும் நானும் எதிர்க்கட்சிகளாக இருந்து விவாதிக்கக் கூடாது.அப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை இனி எனக்கு நீங்கள் உருவாக்கக் கூடாது என்றுக் கேட்டுக் கொண்டார்.

பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் பாடல்கள் என்ற நூலுக்கு அடிகளார் முன்னுரை எழுதியிருக்கிறார்.

நீண்ட தூரம் காரில் அடிகளார் பயணம் செய்யும் போது, போகிற வழியில் எங்கேனும் ஒரு கிராமத்தில் கல்யாண சுந்தரத்தின் பாடல் ஒலி பெருக்கியில் முழங்கினால், உடனே காரை நிறுத்தச் சொல்லி, பாடல் முழுவதையும் கேட்டு மகிழ்ந்து அதன் பிறகே கார் பயணத்தைத் தொடர்வார்.

"சோவியத் புரட்சியை பாரதியார் இனங்கண்டு வரவேற்றாரா? அல்லது எழுச்சி கண்டு வரவேற்றாரா?"

"செய்ந் நன்றி மறவாத பண்பில் சிறந்தவர் கர்ணனா? கும்ப கர்ணனா?"


"திருவள்ளுவர் போற்றுவது அறமா?பொருளா?இன்பமா?"

"வாழ்க்கைக்கு சிறந்த நெறி மார்க்சீயமா?காந்தீயமா?வள்ளுவமா?"

"பாரதியிடம் விஞ்சி நிற்பது சமுதாய உணர்வா?தேசீய உணர்வா?"

"பாரதிதாசன் மொழிப் பற்றாளரா?சமதர்மப் பற்றாளரா?"

இன்னும் பற்பல தலைப்புகளில் அடிகளார் தலைமையில் பட்டிமன்றங்கள் நடைபெற்றன.

பட்டி மன்றத்திற்குத் தலைமை தாங்கிய அடிகளார் தமது முன்னுரையில் விவாதப் பொருளையும் அதில் வாதிடுவோரையும் ஆழமாக அறிமுகப் படுத்துவார்.

ஒவ்வொரு பேச்சாளரும் பேசி முடித்த பிறகு, அவர் பேச்சின் முக்கிய கருத்துக்களை எதிராளிக்கு எடுத்துக் கொடுத்து மோதலை நேர்த்தியாக முடுக்கி விடுவார்.பேச்சாளர் எவரேனும் நெறி தவறிப் பேசினால்,அவரை மூக்கணாங் கயிறு பிடித்து இழுத்து நேர்வழிப் படுத்துவார்.

பட்டிமன்ற விறுவிறுப்பில் தொய்வு ஏற்படாமல் சாதுரியமாகப் பேசும் ஆற்றல்,இறுதியில் தனது தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆணித்தரமாகக் கருத்துக்களை எடுத்துரைக்கும் பாங்கு,இவற்றில் அடிகளாருக்கு நிகர்,அவரேதான்!

இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தின் தமிழகக் கிளைத் தலைவராக பணியாற்றிய அடிகளார்,பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் சிலருடன் ரஷ்யாவுக்கு சென்று,அங்கு 22 நாட்கள் சுற்றுப் பயணம் செய்தார்.

சென்னை அண்ணாசாலையில் மு.கருணாநிதியின் சிலையை பெரியார் தலைமையில் அடிகளார் திறந்து வைத்தார்.

"கலைஞர் முழு நாத்திகர்.அவர் சிலையை தெய்வீகப் பேரவைத் தலைவரான நீங்கள் திறந்து வைக்கலாமா?பேரவை உறுப்பினரான அனைவரும் சம்பந்தப் பட்டதாகி விடாதா?", என்று காஞ்சிப் பெரியவர் அடிகளாரைக் கண்டித்தார்.

"நான் தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகத் தான் சிலையைத் திறந்து வைத்தேன்.அதற்கும் தெய்வீகப் பேரவைக்கும் சம்பந்தம் இல்லை என்றார்",அடிகளார்.

குன்றக்குடியில் தமிழகம் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை அடிகளார் தொடங்கினார்.அதன் ஆசிரியரும் அவரே.சட்டப் சபையில் அடிகளாரின் முழுப் பேச்சும்,திருமுகம் என்ற பெயரில் சுவை மிக்க தலையங்கமும்,வெண்பாப் போட்டிகளும்,கேட்கிறோம் சொல்லுங்கள் என்ற புதிய பகுதியும் அதில் இடம் பெற்றன.




_ஆதிசிவம்,சென்னை.










Share/Save/Bookmark

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 9













பாகம் 9
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை




தன்னைப் பழிப்பவர்களைப் பார்த்து ,இறைவனின் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என அவர் உபதேசித்தார்.

பெரியார் சிலை உடைப்புப் போராட்டத்தை நம் அடிகளார் பகிரங்கமாக கண்டித்து, சிலை உடைப்பிற்கு எதிராக தெய்வீகப் பேரவையை உருவாக்கி,நாடெங்கும் அதன் கிளைகளைப் பரப்பி,தெய்வ பக்தியைப் பெருகச் செய்தார்.

அடிகளாருக்கு எதிராக பெரியார் தொண்டர்களும் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பைக் காட்டிக் கொண்டார்கள்.

அதன் பிறகு சென்னியப்ப முதலியார் இல்லத்தில் தங்கியிருந்த பெரியாரை, அடிகளார் நேரில் கண்டு பேசினார்.இருவரும் நெடுநேரம் விவாதித்தனர்.

"உங்களுக்கு மரியாதை செய்ய உங்கள் உருவப் படத்திற்கு எப்படி மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்களோ,அது போலத்தான் சாமி சிலைகளுக்கு நாங்கள் மாலையிடுவது என்பார்",நம் அடிகளார்.

"அதற்காக கோவில் மூலம் பிராமணர்கள் தின்பதை அனுமதிப்பதா?", என்பார் நம் பெரியார்.

சாதி ஒழிப்பும்,இந்தி எதிர்ப்பும் அந்த இருபெரும் சக்திகளையும் ஒன்றாக இணைத்தது.

அதன் பிறகு நாத்திகமும் ஆத்திகமும் ஒரே மேடையில் ஏறிப் பேசிய அதிசயம் நடந்தது!.

அதன் பிறகு ,"தமிழர்களின் தனிப் பெருந்தலைவர் பெரியார் அவர்களே...!",
என பெரியாரை அடிகளார் பாராட்டி அழைக்க...

"மகா சன்னிதானம் அவர்களே...!",
எனப் பெரியாரும் அடிகளாரை மேடையில் மதிப்புடன் அழைப்பார்.(பெரியாரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஒரே சன்னிதானம் நம் அடிகளார் தான்)


ஒரு முறை அடிகளாரின் அழைப்பின் பேரில், பெரியார் குன்றக்குடிக்கு வருகை தந்தார்.அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.அவர் நெற்றில் அடிகளார் விபூதி பூசியதையும் அவர் பவ்வியமாக ஏற்றுக்கொண்டார்.

அது பற்றித் தனது தொண்டர்களிடம் பெரியார் பேசிய போது," நான் எங்கே விபூதி பூசினேன்?...அடிகளார் தான் பூசி விட்டார்.அவ்வளவு தான் அதை அவர் எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதினார்.அந்த நேரத்தில் நான் முகத்தை திருப்பிக் கொண்டால்,அவரை அவமதிப்பதாகிவிடும்...எனவே நான் மறுக்க வில்லை", என்றார்.

அடிகளாரின் சாதி ஒழிப்பும், தமிழ் மொழிப் பற்றும் தி.மு.க தலைவர் அண்ணாவையும் பெரிதும் கவர்ந்தன.

ஒரு தமிழன் மடாதிபதியாகி இருக்கிறார் என்றால்,அதற்காக நாம் பெருமைப்பட வேண்டுமே தவிர,அவரை எதிர்க்கக் கூடாது என்று தி.க தொண்டர்களுக்குப் பெரியார் அறிவுரை வழங்கினார்.

குன்றக்குடியில் மகா சன்னிதானமாக விளங்கும் இளந்துறவி ,சாதி வேற்றுமைகளைச் சாடுவதில் எங்களுடன் ஒன்றுபடுகிறார் என்று அறிஞர் அண்ணாவும் கூட பெருமையுடன் பேசினார்.

1954 இல் காமராஜர் முதல் அமைச்சரான போது பச்சைத் தமிழன் என்று பாராட்டி அவர் ஆட்சிக்கு முழு ஆதரவு தெரிவித்தார்,பெரியார்.

1955 இல் பொழிந்த கடும் மழை காரணமாகப் பெரு வெள்ளம் பொங்கியது.

நிவாரணப் பணிகளை பார்வையிட்டபடி குன்றக்குடிக்குவந்த,காமராஜர் .

ஆதீன மடாலயத்தின்
முன்னால் ஏழை எளிய மக்கள் வரிசையாக நிற்பதையும்,அடிகளார் அவர்களுக்கு அரிசி வழங்குவதையும் கண்டார்.அரசு செய்ய வேண்டிய அரும்பணிகளை அடிகளார் செய்கிறார் என அகமகிழ்ந்தார்.

குன்றக்குடியில் 1965 இல் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கு
குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கினார்.

இந்திக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது சட்டத்தை ஏவி விட்டது ,அப்போதைய முதலமைச்சராக இருந்த பகத்வச்சலத்தின் அரசு.

விளைவு?

அடிகளாரும் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப் பட்டார்.முடிவில் அடிகளாருக்கு 350 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

1956 இல் காரைக்குடிக்கு அண்ணா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதாக அறிந்து, குன்றக்குடி நீங்கள் வருகை தர வேண்டும் என அதில் வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதினார்,அடிகளார் .

அண்ணா அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.அங்கு நடந்த இரவு விருந்துக்குப் பிறகு, மடாலயத் தோட்டத்தில், மங்கிய நிலவொளியில் அண்ணாவும் அடிகளாரும் நீண்ட நேரம் உரையாடினார்கள்.சாதி ஒழிப்பு,தமிழில் அர்ச்சனை,தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு போன்றவற்றில் இருவரின் கருத்துக்களும் ஒருமித்து இருந்தன.

1967 தேர்தலில் திமுக வென்றது.அறிஞர் அண்ணா முதல் அமைச்சரானார்.பூம்புகாரில் சிலம்பின் நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டது,அதற்குக் கால்கோள் விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.விழாவிற்கு நம் அடிகளாரும் அழைக்கப் பட்டார்.

கட்சிக்காரர்கள்,வேண்டியவர்கள், என்ற பாகுபாடின்றி,தமிழ் இலக்கிய விழாவிற்குத் தன்னை அழைத்த அண்ணாவை,அடிகளார் பாராட்டினார்.

அதோடு இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியதற்காக திருப்பத்தூர் கோர்ட்டில் கட்டிய அபராதத் தொகை ரூ 350 அய் திருப்பித் தரவும் உத்தரவிட்டார்,நம் அண்ணா.

1968 இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் "திருக்குறளை" தேசிய நூலாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.

பலரும் கூடி வாழ வேண்டுமாயின்,முரண்பாடுகளை மாறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் விரிவு படுத்தாமல் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அடிகளாரின் அமுத வாக்கு.

தமிழக மடாலயங்கள் அனைத்தும் சாதி அடிப்படையில் உருவானவைதான். பேரூர் மடாலயம்,வெள்ளாளக் கவுண்டரின் மடம்,குன்றக்குடி ஆதீன சைவ வேளாளர் மடம்,கோவிலூர் ஆதீன நகரத்தார் மடம்.

காஞ்சி சங்கராச்சாரியார் மடாலயம்,பிராமணர் மடம்,ஸ்ரீ பெரும்புதூர் ஜீயர் மடாலயம்,அய்யங்கார் மடம்.இதில் சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண மடாலயம் மட்டுமே சாதி வேறுபாடுகளைக் கடந்ததாகும்.

இந்த மடாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல்,ஒதுங்கி வாழ்ந்தனர்.அவர்களை எல்லாம் தனித்தனியே சந்தித்துப் பேசி அவர்களை தெய்வீகப் பேரவையின் உறுப்பினராக்கினார்.

அண்ணாவுக்குப் பிறகு தமிழக முதல்வரான கலைஞர் கருணாநிதி, அடிகளாருக்கு 1969 இல் மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி) பதவியை வழங்கினார்.அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இறைவனின் சாட்சியாக என்று உறுதி மொழி கூற வேண்டிய அடிகளார் மனச்சாட்சிப்படி என்று கூறினார்.

கடவுளின் பிரதிநிதியாகத் திகழும் அடிகளார், நாத்திகர்களைப் போல் மனச்சாட்சிப்படி என உறுதிமொழி எடுத்திருக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.


_ஆதிசிவம்,சென்னை.











Share/Save/Bookmark

Friday, August 1, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 8








பாகம் 8
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



இதை எல்லாம் கேள்விப்பட்டு தருமபுர ஆதீனத்திலிருந்து ஒருவர் வந்து அடிகளாரிடம் விபரம் கேட்டார்.அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்று அழுத்தமாகச் சொல்லி,அவரை திருப்பி அனுப்பி விட்டார்.

சில நாட்கள் கழிந்தன....

ஒரு நாள் மகா சன்னிதானமும் நம் அடிகளாரும் வேறு யாரும் இல்லாத சமயத்தில்,"சுவாமிகளுக்கு நான் ஏதேனும் தவறு செய்தேனா?", என்று வினவினார்.

வேள்வித் தீயைப் போல் வெகுண்டு எழுந்த சன்னிதானம்," அதிகாரத்தைப் பறிக்க நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்...நான் இறப்பதற்கு மந்திரம் செபிக்கிறீர்கள்," எனக் குமுறினார்.

உடனே நெடுஞ்சாண் கிடையாக சன்னிதானம் முன் தரையில் விழுந்து ,"எனக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது. அப்படி கோள் மூட்டியிருக்கிறார்கள்.சன்னிதானம் உண்மை தெளிய வேண்டும்," என்றார்.

அதன் பிறகு மகாசன்னிதானம்,சில ஊழியர்களை தனித் தனியே வரவழைத்து அடிகளார் முன் அவர்களை விசாரித்தார்.எல்லோரும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றார்களே தவிர, குற்றச்சாட்டை யாரும் நிரூபிக்க முடியவில்லை.

எனவே தன்னிடம் கோள் சொன்ன இரண்டு ஊழியர்களை,சன்னிதானம் வேலை நீக்கம் செய்தார்.அடிகளார் அவர்கள் மீது அனுதாபங் கொண்டு, மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டினார்.சன்னிதானமும் அதற்கு இசைந்தார்.

ஒரு நாள், குன்றக்குடி கீழ்க் கோவிலில் பழைய பாத்திரங்களை விற்க எடை போட்டுக் கொண்டிருப்பதை அறிந்து அடிகளார் ஓட்டமும் நடையுமாக அங்கு விரைந்து போய் இவைகளையெல்லாம் விற்க முடியாது என்று கடுமையாக பேசி பாத்திரங்களை அறைக்குள் தள்ளிக் கதவை இழுத்துப் பூட்டினார்.

இந்த விபரம் கேள்விப்பட்ட சன்னிதானம் நேரில் சென்று விலை பேசி நிறுக்கப்பட்ட பாத்திரங்களைப் பார்வையிட்டார்.

அத்தனையும் புத்தம்புது பாத்திரங்கள்!இவை அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத பழைய பாத்திரங்கள் என்றார்களே என்று வியப்படைந்து அவற்றை விற்க முயன்ற ஊழியர்களை கடுமையாகக் கண்டித்தார்.

ஏற்கனவே வயோதிகராக இருந்து வந்த மகா சன்னிதானம் 1951 ஜீன் மாதத்தில் உடல் நலம் குன்றினார்.அவரை 85 ஆண்டுகளுக்கு முன் உருவான புகழ் பெற்ற மருத்துவ மனையான சுவீடிஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஒருநாள் இரவு சன்னிதானம் மயக்கமடைந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கேள்விபட்டு மருத்துவமனைக்கு அடிகளார் விரைந்தார்.



"மயக்கம் தெளிந்த மகாசன்னிதானம் எப்படி வந்தீர்கள்?," என்று விசாரித்தார்.

"மிதிவண்டியில்...", என்றார்,அடிகளாரோடு வந்த நடேசன்.

"காரை எடுத்துக் கொண்டு போங்கள்...அது இனி குன்றக்குடியிலேயே இருக்கட்டும்.பிரசங்கம் செய்வதற்கு அதில் போக வேண்டாம்.அநாவசியமாக அதைப் பயன்படுத்த வேண்டாம்", என்றெல்லாம் சன்னிதானம் உத்தரவிட்டார்.

ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் சன்னிதானம் குணமடைய வில்லை.எனவே குன்றக்குடி மடாலயத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.

1952 ஜீன் மாதத்தில் சேலம் நகரில் திருக்குறள் கழகப் பொன் விழாவில் கலந்து கொள்ளமாறு அடிகளாரையும் அழைத்திருந்தனர்.

இந்த நிலையில் அவரை விட்டு விட்டு அவ்வளவு தூரம் செல்வதா, திரும்பி வருவதற்குள் ஏதேனும் ஆகிவிட்டால்...?

சன்னிதானத்தின் காதில் கார் ஒலி கேட்காமல்,நகர்த்திய பிறகு அடிகளார் அதில் அமர்ந்து கொள்ள கார் சேலம் நோக்கி வேகம் பிடித்தது.

மூன்று மணி நேரம் பேசி முடித்த பின்பு டிரைவர் பிச்சைராவ் மிக விரைவாகவும்,திறமையாகவும் ஒட்ட... அதிகாலையில் வந்து சேர்ந்தார்கள்.

அடிகளார் காரை விட்டு இறங்கியதும் சன்னிதானத்தின் அறைக்குள் விரைந்து சென்று பார்த்தார்.அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.தன்னை பற்றி அவர் எதுவும் விசாரிக்க வில்லை என்பதை அறிந்து மன நிம்மதி உண்டானது.

கொஞ்ச நேரத்திலேயே சன்னிதானம் அழைப்பதாக கூற ,அடிகளார் விரைந்து போனார்.

சன்னிதானம் வலது கையை உயர்த்தி ஆசிர்வதித்து," நமது மடம் மிகவும் கஷ்டப்பட்டது.இதை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.சிக்கனமாகச் செயலாற்றுங்கள்,"என்று கூறிய பிறகு ஓராண்டு காலம் மரணத்தோடு போராடிய மகா சன்னிதானம் அடுத்த சில நிமிடங்களில் அமரர் ஆனார்.


எனவே 1952 ஜீன் 26ஆம் தேதி குன்றக்குடியில்ஆதீனத்தின் 45 ஆவது குரு மகாசன்னிதானமாக "அருள் திரு. தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற பெயர் மாற்றத் தோடு நம் அடிகளார் பதவியேற்றார்.அப்போது அவருக்கு வயது 27 தான்.

நம் அடிகளார் பிறப்பதற்கு முன்பே குனறக்குடி மடாலயத்தில்,சுமார் 35 வருட காலம் நேர்மையாக பணி செய்த சுப்ரமணிய தேசிகருக்கு 65 வயதாகி விட்டது.

அந்த பழைய தம்பிரான் மீது பரிவும் இரக்கமும் உண்டானது.தன் தந்தைக்குச் சமமான வயதுள்ள சுப்ரமணிய தேசிகரை தமது வாரிசாக நியமித்தார்.

இளைய சன்னிதானமாகிய அந்த முதியவர்,முதன் முதலாக ஆதீனத்தின் காரில் ஏறி அமர்ந்தவுடன் , அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அளவிட முடியாது.அந்த மகிழ்ச்சியால் நம் அடிகளாரை அவர் மனமார வாழ்த்தினார்!

வட்டிக் கடைக்காரர்களிடம் இருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டன.

திருக்கோளக்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நஞ்சை,புஞ்சை நிலங்கள் எல்லாம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன.

பள்ளப்பட்டி,கிருங்காக் கோட்டையில் குத்தகைக்கு விடப் பட்டிருந்த புஞ்சை நிலங்கள் மீட்கப் பட்டு ஏராளமான தென்னை,மா,புளி மரங்கள் வளர்க்கப் பெற்றன.

திருநெல்வேலி,பாளையங்கோட்டை,மதுரையில் இருந்த கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு,காலி இடங்கள் வீடுகளும் கடைகளுமாக தலை நிமிர்ந்தன.வாடகைப் பணம் போன்றவற்றால் ஆதீன வருமானம் பெருகியது.

சன்னிதானமாக பதிவியேற்ற நம் அடிகளாரை பாராட்ட ,மயிலாடுதுறையில் மகேஸ்வர பூஜை நடத்தப் பெற்றது.

உண்பதற்கு தனியாக இலை போடப் பட்டதைக் கண்ட அடிகளார்,"தொண்டர்களுக்கு இலை போட வில்லையா?", என்று கேட்டார்.

"அவர்களுக்கு வேறு இடத்தில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்",
என்று விழா நடத்தியவர்கள் பதில் அளித்தார்.
(தொண்டர்கள் பல்வேறு சாதியினராக இருந்ததால் இப்படிச் செய்யப்பட்டது ).

"தொண்டர்களுக்கு இல்லாத விருந்து எனக்கும் வேண்டாம்", என்று அடிகளார் சாப்பிடாமல் எழுந்து விட்டார்.

விழா நடத்தியவர்களுக்கோ அதிர்ச்சி!

அதன் பிறகு அடிகளாருடன் சேர்ந்துண்ணும் வாய்ப்பு தொண்டர்களுக்கும் கிடைத்தது.

அரிஜனங்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி அருந்திய ஒரே சன்னிதானம்,நம் அடிகளார்தான்!





...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....



_ஆதிசிவம்,சென்னை.



Share/Save/Bookmark

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 7







பாகம் 7
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை


கயிலைக் குருமணி தரையில் வீழ்ந்து வணங்கிய அவர் எழுந்திருக்கவே இல்லை.

"குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்கு விளக்கேற்றி வைக்க வேண்டும்.ஆதீனத்தைக் காப்பாற்ற வேண்டும்", என்று சொல்லிக் கொண்டே தேம்பித் தேம்பி அழுத அவர்," மகா சன்னிதானம் சரி என்று சொன்னால்தான் நான் எழுந்திருப்பேன்", என்று ஒரேடியாக பிடிவாதம் செய்தார்.

கயிலைக் குருமணியின் கால்களை விடாப்பிடியாகப் பற்றி காரியம் சாதித்த கைலாசத் தம்பிரான், கும்பகோணம் கிளை மடத்தில் பல்லாண்டு காலம் கட்டளைத் தம்பிரானாகப் பணியாற்றியவர்.

மகா சன்னிதானமாகும் வாய்ப்பு இல்லாமலே இவரைப்போல் அரும்பணியாற்றிய தம்பிரான்கள் பலர்,குன்றக்குடி ஆதீன வரலாற்றில் காணப்படுகின்றனர்.

சன்னிதானத்திற்கு தர்ம சங்கடம்.கந்தசாமி தம்பிரானை அழைத்து வரச்செய்து அவரிடம் ,"குன்றக்குடியில் இளவரசுப் பட்டம் கட்டச் சம்மதமா?," என்று கேட்டார்.

கந்தசாமியும் மறுத்தார்.அதைக் கேட்டு மகா சன்னிதானத்தின் மனமும் நெகிழ்ந்தது.

வெள்ளை-சிவப்பு நிற மலர்களால் பூக்கட்டிப் பார்ப்பது போல் கயிறு சார்த்திப் பார்ப்பதும் ஒரு வழக்கம்.அப்படி கயிறு சார்த்தி பார்த்தபோது நல்ல நிமித்தங்கள் காணப்பட்டதால்,

கந்தசாமி தம்பிரானை தருமபுர ஆதீனத்திலிருந்து குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்கு மாற்றி செட்டில்மென்ட் எழுதப் பெற்றது.05-09-49 இல் தம்பிரான் குன்றக்குடிக்கு வருவார் எனத் தெரிவித்தனர்.

கந்தசாமித் தம்பிரான் குன்றக்குடிக்கு செல்வது என்று முடிவானதால்,பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய விரும்பினார்.

பூர்விக நிலங்களைப் பிரித்து,தன் பங்கைப் வாங்கி தம் பெற்றோருக்கு கொடுத்துவிடத் தம்பிரான் தீர்மானித்தார்.

இந்து சட்டப்படி,சன்னியாசியாகி விட்ட பிறகு, குடும்பச் சொத்தில் தம்பிரானுக்கு உரிமையில்லை என்று அண்ணன் கோபாலகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

சட்டம் திருத்த முடியாத கடைசித் தீர்ப்பா, என்ன?சட்டத்தை கண்டு அஞ்சி விடவில்லை. விடாப் பிடியாக தொடர்ந்து போராடினார்.

முடிவில் பாகப்பிரிவினை நடைபெற்றது.சொத்துக்கள் நான்கு பங்காகப் பிரிக்கப்பட்டது.

இது நாள் வரை,தன் உழைப்பின் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்ததற்காக, கோபாலகிருஷ்ணனுக்கு,ஒரு பங்கு கூடுதலாக இரண்டு பங்குகளும்,பாண்டுரெங்கன், நம் ரெங்கநாதன் ஆகிய இருவருக்கும் தலா ஒரு பங்கும் தரப்பட்டது.

நம் கந்தசாமி தம்பிரான் தன் பங்கை பெற்றோர் பெயருக்கு மாற்றினார்.அதை அவர்கள் இறுதிக் காலம் வரை அனுபவித்து விட்டு,தங்கள் விருப்பம் போல் யாருக்கும் தரலாம் என்று பாண்டு எழுதப்பட்டது.

அதன் பிறகு அவரின் பெற்றோர்கள் நம் அடிகளாரிடம் எந்த உதவியும் கேட்டுவரவில்லை.அவரின் பெற்றோர்களுக்குப் பிறகு அந்த பங்கு அண்ணன் கோபாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கே போய் சேர்ந்தது.

பெற்றோருக்குப் பின் பெரியண்ணன் கோபாலகிருஷ்ணனும் காலமானார்.பிறகு பெரியண்ணன் குடும்பத்தினரும் அடிகளாரிடம், எந்த உதவியும் கேட்டு, கடைசி வரை வரவே இல்லை.

1949 ஆம் வருடம் செப்டம்பர் 5ந்தேதி குன்றக்குடியில் நம் தம்பிரானுக்கு அருள்திரு. தெய்வசிகாமணி அருணாசல தேசிகர் எனப் பெயர் மாற்றம் செய்து , இளம் சன்னிதானமாக முடி சூட்டினார்.

நம் அடிகளாருக்கு மடாலயத்தில் வேலை மிகவும் குறைவு.இலக்கிய நூற்களை அதிக ஆர்வத்துடன் படித்தார்.குன்றக்குடி து.ச. துரைச்சாமி குருக்களிடம் வடமொழியும் கற்றார்.

மகா சன்னிதானம் சிக்கன வாதி என்பதால் நம் அடிகளார் அடிக்கடி விழாக்கள் நடத்துவதை அவர் விரும்ப வில்லை.

சைவ,சமய விழாக்களை நடத்தினால் போதும்,திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் விழா நடத்தத் தேவையில்லை என்று கருதி, அத்தகைய விழாக்கள் நடத்த பணம் தர மறுத்தார்.அடிகளார் அதற்காக வருந்தவில்லை. ராம.கன்னையா,வீராச்சாமி போன்ற அவரது நண்பர்கள் பணம் திரட்டிக் கொடுத்து விழா நடத்த உதவினார்கள்.


மகா சன்னிதானத்தின் அனுமதியுடன் மு.கதிரேசன் செட்டியாருக்கும்,அதன் பிறகு ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாருக்கும்,தேவகோட்டை சுப.சேவு.மெ.மெய்யப்ப செட்டியாருக்கும் அடுத்தடுத்து பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன.

சன்னிதானத்தின் அனுமதியுடன் அடிகளார் வெளியூர்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தச் செல்வதும் உண்டு.

மதுரை தமிழ்ச் சங்கத்தில் தென்பாண்டி நாட்டில் தமிழ் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

திருப்பத்தூர் வழக்கறிஞர் அ.ராமச்சந்திரன் பிள்ளைக்கு நடந்த பாராட்டு விழாவில் நம் அடிகளார் பாராட்டிப் பேசினார்.

நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற கம்பன் விழாவில்," புதரிடை மலர்", என்ற தலைப்பில் பேசினார்.

ராமநாதபுர சைவ சித்தாந்த மாநாட்டில் இளைஞர் விழாவுக்கு அடிகளார் தலைமை தாங்கி உரையாற்றினார்.

கூத்தனூர் கிறிஸ்தவ பங்கு தந்தை பால்ராஜ் ஏற்பாடு செய்திருந்த விழாவில் அடிகளார் தலைமை தாங்கிப் பேசினார்.

இப்படியாக அடிகளார் சின்னப் பட்டம் ஏற்ற பிறகு ஆறு மாதங்கள் அமைதியாக கழிந்தன.அதன் பிறகு சிற்சில பிரச்சனைகள் தலை தூக்கத் தொடங்கின.

ஆதீனத்துக்கு சொந்தமான கட்டடங்களின் வாடகைதாரர்களும்,நிலக் குத்தகை தாரர்களும் அடிகளாரை நேரடியாகப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள்.மடாலய ஊழியர் சிலருக்கு இது பிடிக்க வில்லை.

விளைவு?

"சின்னப் பட்டமாக இருக்கும்போதே , மடாலய அதிகாரங்களை பெற முயற்சி செய்கிறார் என்றும்,மாக சன்னிதானத்தை யாரும் பார்க்க கூடாதென்றும் உத்தரவு போட்டார்," என்றும் சன்னிதானத்திடம் யாரோ சொல்லி பற்ற வைத்து விட்டார்கள்.

அதை உண்மை என்று நம்பிய சன்னிதானம், அடிகளாரை வாரிசாக நியமித்த செட்டில்மென்டை ரத்து செய்ய மதுரையில் இருக்கும் வழக்கறிஞர் சீனிவாச அய்யங்காரை சந்தித்துப் பேசினார்.அவர் அந்த யோசனையை கை விடுமாறு எடுத்துக் கூறினார்.

மதுரையிலிருந்து திருப்பத்தூர் வந்த சன்னிதானம் வழக்கறிஞர் அ.ராமச்சந்திரன் பிள்ளையிடம் யோசனை கேட்டார். அவரும் செட்டில்மென்டை ரத்து செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையைதான் கூறினார்.



...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....



_ஆதிசிவம்,சென்னை.









Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics