"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, July 11, 2008

தவத்திரு குன்றக்குடி அடிகளார்-அவர்களின் கதை-பாகம் 1




பாகம் 1
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

-அவர்களின் கதை



இந்த நூற்றாண்டின் முற்பகுதியில்...

தஞ்சை மாவட்டத்திலுள்ள, ஒரே ஒரு தெருவாக மட்டுமே இருந்த அந்த சின்னஞ்சிறிய கிராமத்தின் பெயர் தான் நடுத்திட்டு.

அந்த கிராமத்தில் வசித்த சீனிவாசம் பிள்ளை-சொர்ணத்தாச்சி என்ற தம்பதிகளுக்கு பிறந்த, ஓர் அக்கா, 2 அண்ணன்களு க்குப்( கோபால கிருஷ்ணன்,பாண்டுரங்கன்)பிறகு 1925 -ஆம் வருடம் ஜீலை 11ந்தேதி பிறந்த கடைக்குட்டி பையனின் பெயர் தான் ரங்கநாதன்.

திருமணமாகிப் போன அக்காள் வீட்டில் போய் இருந்த சிறுவன் ரங்கநாதனின் சேட்டையை சகிக்க முடியாமல், அக்காளின் கணவர் அவனை அடித்து விட...

பெற்றோர்களிடம் வந்து அழுது அடம்பிடித்த ரோஷக்கார ரங்கநாதனுக்கு, ஆறு வயதானதால் ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப் பட்டான்.

அப்பா சீனிவாசன் விளையாட்டுத்தனமாகப் பந்தயம் கட்டியதில், தனக்கிருந்த விளைநிலத்தை இழந்து பிறகு, திருவேட்களம் என்ற கிராமத்திற்கு அவனின் குடும்பம் இடம் பெயர்ந்தது.

இரண்டு மூன்று பசு மாடுகளை வளர்த்து,பால் கறந்து ,அதனால் வரும் வருமானம் என்று எளிமையாக வாழ்ந்து வந்தது அவனின் குடும்பம்.

வீட்டு மாடுகளிடம் கறந்த பாலை வீடு வீடாக ஊற்றி வரும் வேலை ரங்கநாதனுக்கு ஒதுக்கப் பட்டது.

அந்த சமயத்தில்தான் ஈழத்தைச் சேர்ந்த சுவாமி விபுலானந்த அடிகள் அண்ணாமலைப் பல்கலைழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக வந்து சேர்ந்தார்.

திருநீறு அணிந்த நெற்றியுடன் கள்ளங் கபடமில்லாமல், ஓடியாடி துள்ளித் திரிந்த ரங்கநாதனிடம் சுவாமிகள்,தன் மனசை பறிகொடுத்தார்.

மாலை நேரங்களில், தன் மடியில் வைத்துக் கொஞ்சுவது,குதிரை வண்டியில் உரிமையோடு சுவாமிகளோடு எங்கேனும் செல்வது என்று அவர்கள் இருவருக்குமான உறவு தாய் பசுவுக்கும் கன்றுக்குமான உறவைப் போல இறுகியது.

"கடவுளை நம்பு"
"தமிழை நன்றாகப் படி"
"தீண்டாமை கூடாது"
"மனிதாபிமானத்துடன் எல்லோருக்கும் உதவு"

என்று சொன்ன விபுலானந்தரின் அறிவுரைகள்...

நாமும் இவரைப் போல் துறவியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற விதையை விதைத்தது .

மூன்றாண்டுக் காலம் பணியாற்றிய பிறகு விபுலானந்த அடிகள் இலங்கைக்கு திரும்ப நேரிட்டது. இதை அறிந்த ரங்கநாதன் "நானும் வருவேன்", என்று அடம் பிடித்தான்.

ஒரு நாள் இரவில் ரங்கநாதன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, இவன் சிறுவன் இலங்கைக்குப் போன பிறகு "அம்மா ,அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அழுவான்.எனவே இப்போது இவனை அழைத்து போவது சரியல்ல. பெரியவனாகட்டும் அப்போது பார்க்கலாம்", என்று சொல்லி இலங்கைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு அவரை உயிரோடு பார்க்கும் வாய்ப்பு இனி கிடைக்காது என்று அந்த சிறுவனுக்கு தெரியாது.

அதற்கு பிறகு 1953 ஆம் வருடத்தில் (28 வயதான) காவி உடையணிந்த குன்றக்குடி அடிகளார் இலங்கை சென்றபோது சமாதியில் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி தான் செலுத்த முடிந்து.

விதை முளைத்து கண் விழித்த போது விதை விதைத்தவனின் கண்களை மண் மூடியிருந்தது.

வழக்கறிஞர் தொழிலுக்கு படித்திருந்த இரா.பி.சேதுப் பிள்ளை தமிழ் மொழியின் மீது கொண்டிருந்த தணியாத காதலால், அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஆனார்.

ரங்கநாதன் பால்கார சிறுவன் என்பதால் எளிதில் சேதுப் பிள்ளை அவர்களின் அன்பையும் பெற்றான்.தினமும் ஒரு குறளை தன்னிடம் ஒப்புவிக்கச் சொல்லி ,அன்றாடம் காலணாவை பரிசாக வழங்குவார்.

ஒரு நாள் சிறுவன் தயங்கித் தயங்கி சேதுவின் முன்னால் போய் நின்றான்.

"பள்ளியில் சாரணர் குருளையர் இயக்கத்தில் சேர சீருடை வேண்டும்", என்று கேட்டான்.

அவனை அருகில் அழைத்து குடும்ப நிலவரத்தை பரிவோடு விசாரித்தார்.

அவனுக்கு சீருடை வாங்க ஏற்பாடு செய்தார்.

அவர் வழக்கறிஞர் என்பதால் அவனின் தந்தை பந்தயம் கட்டி இழந்த விளை நிலத்தையும் மீட்டுத் தந்தார்.அதனால்அவன் குடுபத்தின் மரியாதைக்குரிய மனிதரானார்,சேதுப் பிள்ளை.

நாமும் இவரைப் போல எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பிஞ்சு நெஞ்சில் கல்வெட்டாக விழுந்தது.




சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்...


_ஆதிசிவம்.




Share/Save/Bookmark

1 comment:

  1. அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

    ReplyDelete

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics