"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Monday, August 18, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார்"-பாகம் 12









பாகம் 12
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

ஆயினும் அடிகளார் போலீஸ் அனுமதியுடன் சமாதான யாத்திரை சென்றார்.கிறிஸ்தவப் பேராயருடன் குன்றக்குடி அடிகளார் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறார் என்பதை அறிந்த இந்து முன்னணி வழக்கம் போல இந்துக்களின் துரோகியே திரும்பிப்போ என அடிகளார் சென்ற இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டியது.

அடிகளார் அதைக் கண்டு சற்றும் பின் வாங்க வில்லை.சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பின்...

மெல்ல மெல்ல அமைதி திரும்பியது.

முன்பு அடிகளாரை குறை கூறிய அதே இந்து முன்னணி, அதன் பிறகு அவரைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது.

ஒரு சமயம் அடிகளார் தமது ஆதீன ஊழியர்களை அழைத்து," சிவகங்கை மகாராஜா நாளை குடும்பத்துடன் இங்கு வருகை தருகிறார்கள்.எனவே சுமார் நாற்பது பேருக்குத் தேவையான உணவுகளை மிகச் சிறப்பாகத் தயாரிக்க வேண்டும்", என்று வேண்டிக் கொண்டார்.

அதைக் கேட்ட ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.உற்சாகத்துடனும்,சுறுசுறுப்பாகவும் சிறந்த உணவு வகைகளை அவர்கள் தயாரித்தனர்.மன்னரின் வருகையை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க,அடிகளார் நாற்பது விவசாயக் கூலிகளை அங்கு அழைத்து வந்தார்.

"மகாராஜவிற்குத் தயாரித்த உணவுகளை இவர்களுக்குப் பரிமாறுங்கள்", என உத்தரவிட்டார்.

ஊழியர்கள் அதிர்ச்சியில் திகைத்தனர், "சிவகங்கை மன்னர் வருவதாகச் சொன்னீர்களே,சாமி?", எனக் கேட்டனர்.

"ஆமா...சொன்னேன்...இந்த உழைப்பாளிகளும் நமக்கு மன்னர்கள் தான்.எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதியார் பாடவில்லையா?"

"முதலிலேயே தாங்கள் இப்படிச் சொல்லியிருக்கலாமே, சாமி?"

"சொல்லியிருந்தால் சிறப்பாக உணவு சமைத்திருக்க மாட்டீர்கள்.மன்னருக்கு நாம் விருந்து படைப்பது பெரிய விஷயமல்ல.இந்த ஏழை எளிய தொழிலாளிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு போதும் பார்த்திராத உணவுகளை இப்போதும் நாம் படைக்கிறோமே,இதுதான் சிறப்பு" என்றார்,அடிகளார்.

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வைர விழாவுக்கு அப்போதைய தமிழக ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.அந்த விழா மேடையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு "கவுரவடாக்டர் "பட்டத்தை கவர்னர் வழங்கினார்.

"64 வயது நிறைந்த அடிகளார் சிறந்த புலமையாளர்.தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்.பட்டி மன்றங்களிலும்,வழக்காடு மன்றங்களிலும் தெளிவான சிந்தனையுடன்...பேசும் வல்லவர்.30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.இவர் எழுதிய ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலுக்கு தமிழக அரசு முதற்பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

குன்றக்குடியைச் சூழ்ந்துள்ள சில கிராமங்களை அடிகளார் தத்து எடுத்து,நலிந்த பிரிவினர் உயர்வதற்கு வழி வகுத்தவர்.சுதேசி விஞ்ஞான இயக்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் தமிழில் அறிவியலைப் பரப்பி வருகிறார்.16 கல்வி நிலையங்களை நிறுவி,சிறப்பாக அவற்றைச் செயல்படுத்துகிறார்.

தீண்டாமையை ஒழிக்கவும்,இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் அல்லும் பகலும் அயராமல் அடிகளார் உழைத்து வருகிறார்."

இவ்வாறு விழா மேடையில் அறிவிக்கப் பட்டது.

13-04-95 வியாழக்கிழமை மாலையில்,குன்றக்குடி மடாலயத்தில் அடிகளாருக்குத் திடீரென மார்பு வலியும்,மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.உடனே அவரைக் காரில் ஏற்றி மதுரைக்கு கொண்டு வந்தனர்.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அடிகளார் சிகிச்சைக்குச் சேர்க்கப் பட்டார்.

குன்றக்குடியிலிருந்து அவரது கார் புறப்படும் முன் மதுரையில் உள்ள மூன்று முக்கிய பிரமுகர்களுக்கு டெலிபோன் மூலம் தகவல் பறந்தது.அந்த மூவரில் ஒருவர் தான் கருணைதாசன்.மாநகராட்சி முன்னாள் உறுப்பினரான அவர்,திருவருள் பேரவையின் மாநில இணைச் செயலாளரும், தமிழ்பாவை மாத இதழின் ஆசிரியரும் ஆவார்.

இரவில் நேரம் கழித்து வந்த கருணைதாசனிடம் குன்றக்குடியிலிருந்து போன் வந்த செய்தி தெரிவிக்கப் பட்டது.உடனே அவர் குன்றக்குடி மடாலயத்திற்கு போன் செய்தார். அந்த நேரத்தில் அந்தப் போனை எடுத்துப் பேச அங்கே யாரும் இல்லை.

மறுநாள் அடிகளார் மீனாட்சி மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விப் பட்டு அங்கு விரைந்தார்,கருணைதாசன்.

"நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?", என்று கேட்டார்,அடிகளார்.

"சாமி, மதுரைக்கு வந்திருப்பது எனக்கு எப்படித் தெரியாமல் போகும்?", என்று கருணைதாசனும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.சுமார் அரை மணி நேரம் இருவரும் உரையாடினார்கள்.அப்போது அடிகளார் தெளிவாகவும்,தெம்பாகவும் இருந்தார்.

அடுத்த நாள்...

மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமியோடு, கருணைதாசனும் பார்க்கப் போய் இருந்தார்.

அடிகளாருக்கு தூக்க ஊசி போடப் பட்டிருந்தது.இவர்களைப் பார்த்த அடிகளார் சோகச் சிரிப்புடன் பேசினார்.

அடிகளாரை பரிசோதித்த மருத்துவரிடம் போய் அடிகளாரின் உடல் நலம் பற்றி விசாரித்தபோது...

அதிர்ச்சியான செய்தி தான் கிடைத்தது!

"அடிகளாரின் இதயத்தில் ஒரு வால்வு பொருத்த வேண்டும்.அமெரிக்காவில் தான் இந்த சிகிச்சையைச் சிறப்பாகச் செய்கிறார்கள்", என்றார்,மருத்துவர்.

கவலை முகமாக இருந்த கருணைதாசனின் முகம்,கலவர முகமானது. "டாக்டர் அதிகம் பேச வேண்டாம் என்கிறார்...நாம் திரும்பிப் போவோம்", என்று வாசலில் நின்ற காரில் இருவரும் ஏறியபோது,அடிகளாரின் உதவியாளர் அவசரமாக ஓடி வந்தார்,"சாமி, உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்கள்", என்று கருணைதாசனிடம் தெரிவிக்க மீண்டும் அடிகளாரிடம் விரைந்தார்,கருணைதாசன்.

கட்டிலில் ஒருபுறம் சாய்ந்து படுத்திருந்த அடிகளார்,கருணைதாசனின் கையைப் பற்றி உட்காரச் சொன்னார்."அமெரிக்கா சென்று இதய ஆப்ரேசன்(வால்வு மாற்ற சிகிச்சை)செய்து கொள்ள தீர்மானித்து விட்டேன்.

சென்னை மைலாப்பூரில் உள்ள கற்பக விடுதி(குன்றக்குடி ஆதினத்திற்கு உரியது)யில் என்னை வந்து பாருங்கள். நாம் அமெரிக்காவிற்குப் போவோம்", என்றார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி அவர் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்படுவதற்குத் தேவையான பாஸ்போர்ட்,விசா,விமான டிக்கெட் அனைத்திற்கும் அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலையில் மதுரையிலிருந்து , சென்னைக்குப் புறப்பட்டுச் செல்ல அவரின் உடல்நிலை ஒத்துழைக்க வில்லை.

15 ஆம் தேதி நள்ளிரவுக்கு சற்று முன்னதாக (11-45 மணியளவில்) அடிகளாரின் திணறித் துடித்த இதய துடிப்பு சப்தம் இல்லாமல் நின்று போனது!

தமிழ்நாட்டின் இதயமாக குன்றக்குடியில்துடித்துக் கொண்டிருந்த அந்த இதயம் நின்று போனது...!

மதுரையிலிருந்து வந்த அடிகளாரின் உடல், அந்த நள்ளிரவில் 2-30 மணிக்கு குன்றக்குடியை அடைந்ததும்...

அழுகையும்,ஒப்பாரியும் கூக்குரலும், கதறலும்,ஓலமும் அந்த இரவையும்,திசைகளைக் கிழித்ததுக் கொண்டு, அந்த வானத்தை நோக்கி உயர்ந்தது!

தமிழ் நாட்டின் உயர்வுக்கு மலையாய் எழுந்த அடிகளாரின் முன்னால் ஒட்டு மொத்த தமிழ்நாடே தலை குனிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது...!

சில உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் நம் மனம்...

யாராலும் சமாதானம் சொல்ல முடியாத,ஆறுதல் சொல்ல முடியாத சில இழப்புகளை,உண்மைகளை, நம் மனம் ஏற்க மறுக்கிறது...


.....முற்றும்.....

_ஆதிசிவம்,சென்னை.







Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics